"லைவ் கவரேஜ்.." நீட் விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு.. பின்னணி!
சென்னை: தமிழ்நாட்டில் நீட் விலக்கு விவகாரத்தில் நாளைய தினம் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் நீட் தேர்வின் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிரான மனநிலையே உள்ளது,
அரசியல் தளத்திலும் மற்ற விஷயங்களில் மாறுபட்டு இருக்கும் அரசியல் கட்சிகள் கூட நீட் விலக்கு விவகாரத்தில் ஒன்றுபட்டே உள்ளன.

திமுக அரசு
இது தொடர்பாகக் கடந்த அதிமுக ஆட்சியிலும் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு கோரி சிறப்புச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை. கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசார சமயத்தில் நீட் விலக்கைப் பிரதான வாக்குறுதியாக முன் வைத்த திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைத்து.

ஆளுநர்
இந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் திமுக அரசு புதிதாக நீட் விலக்கு மசோதா தயார் செய்து, கடந்த செப். 13ஆம் தேதி தமிழக சட்டசபையில் முழு மனதாக நிறைவேற்றியது. இதையடுத்து இந்த மசோதா ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. சுமார் 6 மாதங்களாக இந்த விவகாரத்தில் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காத நிலையில், கடந்த வாரம் இந்த மசோதாவை அரசுக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழக எம்பிகள் இது தொடர்பாக நாடாளுமன்றத்திலேயே கேள்வியும் எழுப்பினர்.

அனைத்துக் கட்சி கூட்டம்
இதையடுத்து கடந்த பிப்.5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்ட நடத்தப்பட்டது. இதில் அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் கலந்து கொண்டன. இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்காக நாளைய தினம் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரலை
இதற்கிடையே நீட் விலக்கு தொடர்பான சிறப்புக் கூட்டத்தை நாளை சட்டசபையில் இருந்து நேரலை செய்யத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு விவகாரத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறது என்பதைப் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சிறப்புக் கூட்டத்தொடரை நேரலையாக ஒளிபரப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக, இன்று மதியம் நீட் விலக்கு சிறப்புக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார்.
Recommended Video

முதல்முறை இல்லை
தமிழக சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது இது முதல்முறை இல்லை. இது தொடர்பாக 10 ஆண்டுகளாகவே கோரிக்கை இருந்து வந்தது. இருப்பினும், நேரலை செய்யாமல் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களாகவே சட்டசபை நிகழ்வுகளாக ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பாகத் தேர்தல் சமயத்திலேயே உறுதி திமுக உறுதி அளித்திருந்தது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கேள்வி நேரம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. நேரலையில் ஒளிரப்பட்டதால் உறுப்பினர்கள் கண்ணியமாகவும் நேரத்தை வீணாக்காத வகையிலும் நடந்து கொண்டதாகக் கூறப்பட்ட நிலையில், நாளை நடைபெறும் சிறப்புக் கூட்டத்தொடரையும், அரசு நேரலையாக ஒளிபரப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications