ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் கன்னியாஸ்திரிகளுக்கு நிதியுதவி ரூ.60,000ஆக உயர்வு
சென்னை: கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ 37,000இல் இருந்து, ரூ 60,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020க்கு முன்பு வரை ஜெருசலேம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.20,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. 2020-21-ஆம் ஆண்டில் இந்த நிதியுதவி ரூ.20,000இல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் மஸ்தான் வெளியிட்டார். கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசேலம் செல்ல அளிக்கப்படும் நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்,
சட்டசபையில் பேசிய அமைச்சர் மஸ்தான், கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசேலம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.37 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜெருசேலம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரூ 60 ஆயிரமாக உயர்த்தியும், அதற்காக ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications