இந்த நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலம் தமிழகம்.. பின்னணி என்ன?
சென்னை: நடப்பு நிதியாண்டு தொடங்கி ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில், தமிழக அரசு வாங்கியுள்ள கடன் வரையறுக்கப்பட்டதை விட அதிகரித்துள்ளது.
இதனால் இந்த நடப்பு நிதியாண்டில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. இதற்கான பின்னணி என்ன என்பதை பார்ப்போம்
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் சுமை கடுமையாக அதிகரித்து வருகிறது. 2000 - 01-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 28,685 கோடி ரூபாய் ஆக இருந்தது. ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக உயர்ந்தது.

தமிழக கடன்
அடுத்த நான்கு ஆண்டுகளில் அதாவது 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது. இது 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக மாறியது. ஆனால் தமிழக அரசின் கடன் தொகை 2020 - 21 ஆம் நிதியாண்டில் ரூ.4,56,660 கோடியாக உயர்ந்தது. ஒரே நிதியாண்டில் சுமார் ரூ. 60000 கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்தது.

கடன் வரம்பை விட அதிக
இந்நிலையில் 2020-2021 நிதியாண்டில் (கடந்த மூன்று மாதங்களில்) இதுவரை தமிழக அரசு ரூ.30,500 கோடி கடன் பெற்றிருக்கிறது. தமிழகம் பெற்ற இந்த கடன் தொகை, நிர்ணயிக்கப்பட்ட கடன் வரம்பை விட அதிகம் ஆகும். தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா ரூ.25000 கோடி கடன் பெற்றுள்ளது.

ரூ.130000 கோடி வருவாய்
தமிழக அரசிற்கு பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரி, டாஸ்மாக் வருவாய், ஜிஎஸ்டி பங்கு மூலம் மாதம் ரூ.13,000 கோடி சராசரியாக வருவாய் கிடைக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக கொரோனா லாக்டவுனால் வருவாய் பெருமளவு சரிந்தது. இதனை ஈடுபட்ட தமிழக அரசு அதிக அளவு கடன் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா நெருக்கடியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால் அரசு மக்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே அதிக செலவு செய்வதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு பணி
இதனிடையே இந்த நிதியாண்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆண்டுக்கு ரூ.64208 கோடியும், ஓய்வூதியதார்களுக்கு ரூ.32000 கோடியும் செலவாகும் என கணக்கிடப்படுகிறது. இத்துடன் கொரோனா தடுப்பு பணிக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது. எனவே தான் தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களில் அதிக கடன் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

மத்திய அரசு கொடுக்க வேண்டும்
இந்நிலையில் கொரோனாவால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துவிட்ட நிலையில், கடன் சுமையும் அதிகரித்து வருவதும் பின்னாளில் பெரும் பொருளாதார சிக்கலுக்கு வழீவகுக்கும் என்று விமர்சனங்கள எழுந்துள்ளன. மத்திய அரசு கொடுக்க வேண்டிய வரி வருவாயை நிலுவை இல்லாமல் தமிழகத்திற்கு அடுத்த 6 மாதத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications