இந்த நொடி வரை.. மத்திய மின்சாரம் நமக்கு வரவில்லை.. குஜராத் நிலை தெரியுமா? செந்தில் பாலாஜி பளீர்!
சென்னை: தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 790 மெகாவாட் மின்சாரம் இந்த நொடி வரை வரவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஏற்பட்ட மின் தடை பற்றி இன்று சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
மின்தடைக்கான காரணம் என்ன என்று அரசு விளக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.
இரவு முழுக்க மின்தடை பற்றி விசாரித்த முதல்வர்! அன்று நடந்தது என்ன? செந்தில் பாலாஜி சொன்ன சீக்ரெட்!
விளக்கம்
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு அளித்த பதிலில், தமிழ்நாட்டின் தனிப்பட்ட மின் உற்பத்தி உயர்த்தப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் 15503 மில்லியன் யூனிட்டாக 2021ல் இருந்த அனல்மின்நிலைய உற்பத்தி தற்போது அது 20391 மில்லியன் யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது. 4837 மில்லியன் யூனிட் மின்சாரம் நம்முடைய திமுக அரசின் சொந்த முயற்சியால் உயர்த்தப்பட்டு உள்ளது. கடுமையான விலை ஏற்றம், நிலக்கரி தட்டுப்பாடு இருந்தும் கூட, நம்முடைய உள்நாட்டு நிலக்கரியின் மூலமே இந்த உற்பத்தி உயர்த்தப்பட்டுள்ளது.
இறக்குமதி
இறக்குமதி செய்யாமல் உள்நாட்டு நிலக்கரி மூலம் இந்த உற்பத்தியை செய்து உள்ளோம். நமக்கு தேவையான நிலக்கரி ஒரு நாளுக்கு 72 ஆயிரம் டன். இதுவரை 48 ஆயிரம் டன் வரை நிலக்கரி வழங்கி வந்த ஒன்றிய அரசு, கடந்த 18/4/22 அன்று நிலக்கரி விநியோகத்தை குறைத்தது. 30303 டன் என்ற அளவிற்கு வழங்கப்பட்டு, மீண்டும் 20257 டன் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டு, நேற்று 46 ஆயிரம் டன் என்று குறைந்த அளவிலேயே மத்திய அரசு வழங்கி உள்ளது.
சமாளிக்க வேண்டும்
இதை சமாளிக்க பல மாநிலங்கள் நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆனால் நாம் ஏப்ரல், மே மாதத்திற்கான நிலக்கரி தேவையை கணக்கிட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கு 4 நிறுவனங்கள் பங்குபெற்ற நிலையில் ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டன. இந்த நிலக்கரி விரைவில் இறக்குமதி செய்யப்படும். கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட மின் தடை என்பது 796 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்காத காரணத்தால் உருவான மின் தடை.
மின் தொகுப்பு
இது மத்திய மின் தொகுப்பு மின்சாரம். இதுவரை.. இன்று வரை.. இந்த நொடி வரை இந்த மத்திய தொகுப்பு மின்சாரம் நமக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் நாம் சொந்த மின்சார உற்பத்தியை பெருக்கி, தனியார் மின்சார உற்பத்தியை பெருக்கி உடனடியாக மின் தடையை சரி செய்தோம். இது போன்ற நிகழ்ச்சிகள் கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை என்று கூற வேண்டாம்.
இதே சூழ்நிலை
2016ல் இதே போன்ற சூழ்நிலை 5 முறை, 2017ல் 13 முறை, 2018ல் 16 முறை, 2019ல் 9 முறை, 2020ல் 8 முறை, 2021ல் 17 முறை என்று கடந்த ஆட்சியில் 68 முறை இப்படி நடந்துள்ளது. ஆனால் கடந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் ஒரே ஒரு முறைதான் இப்படி மின் தட்டுப்பாடு ஏற்பட்டு தடை ஏற்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதி தேவைக்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
அண்டை மாநில மின் தடை
குறிப்பாக அண்டை மாநிலங்களில் மின் தடை அதிகம் உள்ளது. அண்டை மாநில நிலை தெரியுமா? குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மின் தடை அதிகம் உள்ளது. நிலக்கரி இல்லை, அதனால் மின் தடை செய்ய போகிறோம் என்று சொல்லும் அளவிற்கு அங்கு நிலைமை உள்ளது. தொழிற்சாலைகளுக்கு கூட மின்சாரம் வழங்கப்படுவது இல்லை. ஆனால் இங்கே அந்த நிலை இல்லை. அதுவும் கூட மத்திய அரசு மின்சாரம் வழங்காத காரணத்தால்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள், என்று செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.