ஆணிவேரையே ஆட்ட போகும் மனு.. ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய கேஸ்.. காரணம் என்ன?
சென்னை: டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த மனுவிற்கு என்ன காரணம் என்று தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தகவல்களை வெளியிட்டு உள்ளன.
சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.

ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.
வழக்கு நிலுவை: கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.
தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார், என்று வழக்கில் தமிழ்நாடு அரசு கூறியது.
செக் வைக்க திட்டம்; இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு முக்கியமான உத்தரவுகளை பிறப்பிக்கலாம். முக்கியமாக மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு அனுப்பப்பட்ட கோரிக்கையில் அவர் இன்னும் கையெழுத்து போடவில்லை. இதில் கையெழுத்து போட வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் அனுப்பப்பட்டது.
இது தொடர்பான கோரிக்கையும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனுவாக வைக்கப்பட்டு உள்ளது. அதாவது அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகளை பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கோடநாடு வழக்கிலும் கூட எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்: இதனையடுத்து அவசரம் அவசரமாக, தம்மிடம் நிலுவையில் இருந்த பல்கலைக் கழகம் தொடர்பான 10 மசோதாக்களை அரசுக்கு திருப்பி அனுப்பினார் கவர்னர். அப்படி திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில் பேரவையின் சிறப்புக்கூட்டத்தை கடந்த 18-ந்தேதி கூட்டி மீண்டும் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைத்துள்ளது தமிழக அரசு.
கண்டனம்: இந்த மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கூடாது. அவர்தான் அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார்.

ஆனால் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தவறு என்றும் கூறப்பட்டது. சட்டப்படி அவருக்கு மீண்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் அதிகாரமே கிடையாது. ஏனென்றால் அவர் திருப்பி அனுப்பிய போதே அதில் முடிவு எடுத்துவிட்டார். எனவே மீண்டும் அவர் மேஜைக்கு அதே மசோதா வரும் போதும் அதில் அவருக்கே முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது.
இதை மையமாக வைத்தே ; டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி, அரசு அனுப்பிய மசோதாக்களை, குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.
மசோதாக்களுக்கும், அரசின் கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்வது, புறக்கணிப்பதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது, தவறானது என அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் ஆளுநர் இதில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது.












Click it and Unblock the Notifications