துரைமுருகனை கோபப்படுத்தியது போதாதுனு! அதே கேள்வியுடன்! மீண்டும் வந்த தவாக வேல்முருகன்
சென்னை: பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஏரிகளில் காவிரி ஆற்றின் உபரி நீரினை நிரப்பும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் பல ஆயிரணக்கணக்கான ஏக்கர் விவசாய விளைநிலங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான விளைநிலங்கள் மழை பெய்யும் காலங்களில் கிடைக்கும் நீரைக்கொண்டும், ஆழ்துளை கிணற்று நீரைக்கொண்டும் விவசாயம் செய்யப்பட்டு வரப்படுகிறது.

இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள விளைநிலங்களை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் லட்சக்கணக்கான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழை பெய்யாத காலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்த பவானி, அந்தியூர் சட்டமன்ற தொகுதிகளில் 50க்கும் மேறப்ட்ட பெரிய ஏரிகள், சிறிய ஏரிகள் மற்றும் குளங்கள், குட்டைகள் உள்ளன.
குறிப்பாக, எண்ணமங்கலம் ஏரி 77 ஹெக்டேர், கெட்டிசமுத்திரம் ஏரி 81 ஹெக்டேர், அந்தியூர் ஏரி 51.10 ஹெக்டேர், பிரம்மதேசம் ஏரி 51.10 ஹெக்டேர், தண்ணீர்பள்ளம் ஏரி 81 ஹெக்டேர், சென்னம்பட்டி ஏரி 29.88 ஹெக்டேர், முரளி ஏரி 26.85 ஹெக்டேர் ஏரி, ஓடத்துறை ஏரி 81.29 ஹெக்டேர், ஆப்பக்கூடல் ஏரி 51 ஹெக்டேர், அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாமரை ஏரி, முகாசிப்புதூர் ஏரி, காரப்பட்டி ஏரி, பூனாச்சி ஏரி, பட்லூர் ஏரி, ஒட்டப்பாளையம் ஏரி, விலாமரத்துக்காட்டூர் ஏரி, பச்சப்பாளி ஏரி, சீலம்பட்டி ஏரி ஆகிய ஏரிகள் பல நூறு ஏக்கர் பரப்பளவில் உள்ளன.
இந்த ஏரிகளில் மழை பெய்யும் காலங்களில் அவ்வப்போது கால்வாசி தண்ணீர் தேங்கி நிற்கும். மற்ற காலங்களில் மேற்பட்ட ஏரிகள் வறண்டே காணப்படும்.
கர்நாடகாவில் மழை பெய்து அணைகளில் நிரம்பி, அதன் உபரி நீரால் மேட்டூர் அணை நிரம்பும் போது, அதன் உபரி நீர் பல நூறு டி.எம்.சி நீர் ஆண்டுந்தோறும் வீணாக கடலில் கலக்கிறது.
எனவே, பவானி, அந்தியூர் ஆகிய இரு சட்டமன்ற தொகுதி மக்களின் நலன் கருதி, காவிரி ஆற்றின் உபரி நீரை நீரேற்று திட்டத்தின் மூலம், அத்தொகுதியில் உற்ற ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பும் திட்டத்தை அறிவித்து, அதற்கு போதுமான நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த திட்டமானது, கோனேரிப்பட்டி கதவணை மின் உற்பத்தி நீர்தேக்கப்பகுதி, நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின் உற்பத்தி நீர்தேக்கப்பகுதி, ஊராட்சிக்கோட்டை கதவணை மின் உற்பத்தி நீர்தேக்கப்பகுதி ஆகிய பகுதிகளில் நிறைவேற்றலாம்.
இதன் மூலம், பவானி, அந்தியூர் தொகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் செழிப்படையும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் இலட்சக்கணக்கான விவசாய கூலித்தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். வேளாண் மற்றும் செல்வநிலை உயரும்.
இரண்டு தொகுதிகளிலும் உள்ள குடிநீர் பிரச்சனைகள் தீரும். கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளின் நீர்மட்டம் உயரும். கால்நடைகளுக்கு தீவனப்பஞ்சம் ஏற்படாத சூழ்நிலை உருவாகும். உணவு உற்பத்தி பெருகி உணவுப் பஞ்சம் ஏற்படாத சூழல் உருவாகும் என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications