36 மணி நேரத்தில் 15 கொலை! எகிறி அடித்த இபிஎஸ்! 2 நாளில் 12 கொலை தான்! தமிழக போலீஸ் அளித்த விளக்கம்!
சென்னை : தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக 'சில ஊடகச் செய்திகளில்' மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன என தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் ரெய்டு- சிக்கிய 2 ஏ.கே.47 துப்பாக்கிகள்!
15 படுகொலைச் சம்பவங்கள்
இதுதொடர்பாக இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில்,"தமிழகத்தில் குற்றங்களைத் தடுப்பதில் நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசின் முதல்வர், விளம்பர மோகத்தில் திளைத்துள்ளதால், இன்று தமிழகம் கொலைக் களமாக மாறி வருகிறது. முதல்வர் அவர்களது நேரடி மேற்பார்வையில் இயங்கும் காவல்துறை செயலிழந்து கிடப்பது வெட்கக்கேடானது. கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 15 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.
எடப்பாடி பழனிசாமி
சட்டம்-ஒழுங்கை நானே நேரடியாக கவனித்து வருகிறேன் என்று முதலமைச்சர் திரு.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு கூறினார். இதுதான் அவர் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை கவனிக்கும் லட்சணமா? விடியா திமுக அரசு இனியாவது விழித்துக்கொண்டு கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம், போதைப் பொருள் விற்பனை போன்ற சமுதாய சீர்கேடுகளைத் தடுத்து நிறுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என கூறியிருந்தார்.
தமிழக காவல்துறை
இந்நிலையில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக 'சில ஊடகச் செய்திகளில்' மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகச் செய்திகளில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 22.08.2022 அன்று 7 கொலைகளும், 23.08.2022 அன்று 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளது.
இந்தாண்டு குறைவுதான்
சில ஊடகங்களில் பட்டியிலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்ட் மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை. மேலும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினர்கள், தனி நபர்களிடையே உள்ள முன் விரோதம் காரணமாக நடந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜீலை வரை 940 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 2021-ல் இதே காலகட்டத்தில் 925 கொலைகளும் 2019 ஆம் ஆண்டு 1041 கொலைகளும் நிகழ்ந்துள்ளது. ஆகவே முந்தைய 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இந்தாண்டு, 101 கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன." என கூறப்பட்டுள்ளது.