தமிழக காவல் துறையில் உள்ள.. 1,299 எஸ்ஐ பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு!
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இன்று எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1.78 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர்.
தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி இன்று தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுகிறவர்கள் மட்டும் உடல் உறுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எத்தனை பேர் தேர்வு எழுதுகிறார்கள்?
தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வை 1.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வை எழுத, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. மொத்தம் ஒரு லட்சத்து 1,78,391 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 46 மையங்களில் இந்த தேர்வு இன்று நடைபெறுகிறது.
சென்னையில் தேர்வு
சென்னையில் மட்டும் 9 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய அதிகாரிகள், அந்தந்த மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்தனர். தேர்வில் முறைகேட்டை தடுக்க விண்ணப்பதாரர்களின் இடது கை கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக தேர்வாளர்கள் ஆன்லைனில் அப்ளை செய்யும் போதே, அவர்களுடைய இடது கை விரல் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
தேர்வு நேரம்
காலை 10 மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரை முதன்மை தேர்வும், பிற்பகல் 3:30 மணியிலிருந்து 5:10 மணி வரையில் தமிழ் தகுதி தேர்வும் நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள், காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வரவேண்டும். தேர்வு கூடத்துக்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், கடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது.












Click it and Unblock the Notifications