சபாஷ்! தமிழ்நாட்டில் மின் நுகர்வில் புதிய உச்சம்.. மின் வெட்டே இன்றி ஈடு செய்த மின்சார வாரியம்!
சென்னை: தமிழ்நாடு மின் நுகர்வில் நேற்று புதிய உச்சம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு 435.85 GWh ஆக நேற்று பதிவாகியுள்ளது.
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் மின் வெட்டு அதிகமாக இருந்ததை எதிர்க்கட்சியான அதிமுக மிகக் கடுமையாக விமர்சித்தது. அதன் விளைவாக 2011ல் திமுக ஆட்சியைப் பறிகொடுக்க நேர்ந்தது. இந்நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு உச்சபட்ச மின் பயன்பாடு இருந்து வரும் சூழலிலும், முடிந்தவரை மின்வெட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாகி வருவதன் காரணமாக வீடுகளில், ஏசி உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், நாளுக்கு நாள் மின் நுகர்வு வெகுவாக அதிகரித்து வருகிறது. அதேசமயம், மின் நுகர்வை ஈடு செய்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு மின் பகிர்மாண கழகம், தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை நேற்று எட்டி இருக்கிறது. 435.85 ஜிகாவாட் ஹவர் அளவுக்கு நேற்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது. மாநிலத்தின் மின் நுகர்வை மின்சார வாரியம் திறம்பட பூர்த்தி செய்து வருகின்றது.
தமிழ்நாடு முதல்வரின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
தொழில் துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம், தமிழ்நாட்டில் மின் நுகர்வு 430.13 GWh ஆக இருந்த நிலையில், நேற்று 435.85 GWh ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தால் ஒவ்வொரு நாளும் மின் நுகர்வு அதிகரித்து வருவதால், மின் வெட்டு இன்றி கூடுதல் மின் பயன்பாட்டை ஈடு செய்ய மின்சாரத்துறை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications