108 ஆம்புலன்ஸ்.. நிறைவேறிய கனவு.. முதல் பெண் ஓட்டுநராக கலக்கப் போகும்.. வீரலட்சுமி!
சென்னை: நீண்ட நாட்களாக ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்ற வேண்டும் என்ற தனது கனவு தற்போது நிறைவேறி இருப்பதாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வாய்ப்பு கிடைத்து இருக்கும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். இவருக்கு இந்தப் பணி மனநிறைவு தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் வீரலட்சுமி. சென்னை அருகே திருவொற்றியூரில் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கார் ஓட்டுநராக இருந்து வருகிறார். வீரலட்சுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கார் ஓட்டுநராக இருந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் இந்தப் பணிக்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் இவருக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாய்ப்பு கடந்த மாதம் கிடைத்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் உள்பட பல நூறு நோயாளிகளை கடந்த ஒரு மாதமாக தனது ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு வீரலட்சுமி அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பயன்பாட்டுக்கு என்று 500 புதிய 108 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் இன்று 118 புதிய ஆம்புலன்சுகள் இயக்கி வைக்கப்பட்டு உள்ளன. தற்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் வீரலட்சுமி இனி திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வழங்கி இருக்கும் 108 ஆம்புலன்சை இயக்க இருக்கிறார்.

இதுகுறித்து டிவி சேனலுக்கு பேட்டி அளித்து இருக்கும் வீரலட்சுமி, ''எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறி இருக்கிறது. ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. மன நிறைவாக இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இவர் தமிழ்நாட்டின் இரண்டாவது பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர். அரசின் 108 ஆம்புலன்சை ஓட்டும் முதல் பெண்மணி ஆவார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கயல்விழி என்ற பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்து சாதனை படைத்தார்.












Click it and Unblock the Notifications