தவெக உடன் கைகோர்க்கிறதா காங்கிரஸ்? தலைவர்கள் கொடுத்த சிக்னல்.. கேசி வேணுகோபால் சொன்னதை பாருங்க!
சென்னை: தவெக அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், "தமிழ்நாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் விரைவில் எடுக்கும்" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் மாநிலம் முழுவதும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 72 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 54 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருகிறது.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் வெற்றி வாய்ப்பில் உள்ளது. தற்போது வரை ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை விஜய்யின் தவெக எட்டாத நிலையில், கூட்டணி மாறுதல்கள் ஏற்படுமா?எனும் கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வெளியேறி தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகித்துவரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் பேசுகையில், "தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் தவெகவை நோக்கித் திரும்பியுள்ளனர். அதனால்தான் தவெக இத்தகைய பிரம்மாண்டமான வாக்கு எண்ணிக்கையைப் பெற்று வருகிறது.
இது குறித்த அறிக்கையை, எங்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமைப்புப் பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன். தமிழகத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் அனைவரும் இணைந்து முடிவெடுப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால், "விஜய்யின் வெற்றி நிச்சயமாக பாராட்டுக்குரியது. தமிழ்நாடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கையை காங்கிரஸ் மேலிடம் விரைவில் எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் இந்தப் பேச்சுகள், அக்கட்சி தவெக உடன் கூட்டணி அமைக்க ரெடியாவதற்கான சிக்னல் தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். காங்கிரஸ் கட்சி, நீண்ட காலமாகவே ஆட்சியில் பங்கு என்ற குரலை எழுப்பி வரும் நிலையில், தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications