மின்னணு ஏற்றுமதியில் No 1.. உபியை உதைத்துத் தள்ளிய தமிழ்நாடு!
சென்னை: இந்திய அளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து தினம் ஒரு நல்ல செய்தி வெளியாகி வருகிறது. அப்படி என்ன நல்ல செய்தி என்கிறீர்களா? நாட்டிலேயே எலெக்ட்ரானிக் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக வளர்ச்சி அடைந்து வருவதாக டி.ஆர்.பி. ராஜா தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அவரது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் அவர், "இந்த ஆண்டு அக்டோபர் 2023 வரை மின்னணு பொருட்கள் ஏற்றுமதி குறித்து மாநிலம் வாரியாக தரவு வெளியாகியுள்ளது. அதில் தமிழ்நாட்டின் வெற்றியானது உண்மையில் நினைவுகொள்ளத்தக்கது"என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பாக ஈவி எலெக்ட்ரானிக் உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தை எட்டிப்பிடித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது இந்திய அளவிலான மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் மாபெரும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இந்த நடப்பாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவு வரலாற்றில் மதிக்கத்தக்க வளர்ச்சியை எட்டியிருக்கிறது. அதாவது 4.78 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 3,96,88,57,90,000 உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இந்த வளர்ச்சியானது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 31% ஆகும். நமது மாநிலமானது இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலத்துடன் ஒப்பிடும்போது அதிலிருந்து இரண்டு மடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இதே நிலை இந்த நிதியாண்டின் இறுதிவரை நீடிக்கும்போது தமிழ்நாடு 8 பில்லியன் டாலர் யுஎஸ்டியை எட்டிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வளர்ச்சியானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 5.37 பில்லியன் டாலர் என்றும் இது மிகப்பெரிய பாய்ச்சல் ஆகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டாலர் மதிப்பில் 8 பில்லியன் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 66,41,47,200.00 என மதிப்பிடலாம்.
வரும் ஜனவரி மாதம் TamilNadu Global Investors Meet 2024 நடைபெற இருக்கிறது. அதற்காக முதல்வர் ஸ்டாலின் பல நாடுகளுக்குப் பயணம் செய்து முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த ஆட்சியில் 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்குத் தமிழ்நாட்டில் பொருளா தாரத்தை உயர்த்துவதற்காக அவர் பல மட்டங்களில் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே மூலோபாயக் கொள்கைகள் வகுத்துத் தந்துள்ளார். புதிய தொழில் தொடங்குவதற்கான சாளரங்களைத் தங்குதடை இல்லாமல் திறந்துவிட்டுள்ளார்.
அரசின் விதிமுறைகளை எளிதாக்கி, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டும் இருக்கிறார். இதன் மூலம் தொழில்துறை முன்னைவிட வலுவான கட்டமைப்பை உறுதி செய்துள்ளது என்று அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆகவேதான் இந்த அளவுக்கு வளர்ச்சியைத் தமிழ்நாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் பெருமை பொங்கக் கூறி இருக்கிறார்.
இந்த மின்னணு பொருள்கள் ஏற்றுமதியில் கிடைத்துள்ள வெற்றி குறியீட்டு மதிப்புகள் வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு நல்ல பயன்களை ஏற்படுத்தும் என்றும் இந்த வெற்றியானது முதல்வர் மு.க. ஸ்டாலினின் அப்பணிக்கானது என்றும் அவர் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் வெளியாகி இருக்கும் இந்தத் தரவுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கான புள்ளிவிவரம் மட்டுமல்ல; மாநிலத்தை அதற்கான சூழலை உருவாக்கி இருப்பதற்கான சரியான சான்று என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் வர்த்தகத் துறையின் வருடாந்தர பகுப்பாய்வுக்கான நிர்யாத் (NIRYAT) தேசிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தரவுகளின்படி தமிழ்நாட்டு இந்த வளர்ச்சியை எட்டி இருக்கிறது.
அதன்படி இந்தியாவில் மின்னணு பொருள்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் மொத்த மதிப்பு 15.48 பில்லியன் டாலராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 4.78 பில்லியன் டாலர் அளவை பதிவு செய்து முதல் இடத்தில் உள்ளது. அதாவது இந்திய அளவில் மின்னணு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் 30.86% என்ற அளவில் மாநிலம் பங்களிப்பைச் செய்துள்ளது.
அடுத்து உத்தரப் பிரதேசம் 2.58 பில்லியன் டாலர் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதில் குஜராத் மாநிலம் 5வது இடத்திலும் தெலுங்கானா கடைசி இடத்திலும் உள்ளன என்பது கவனிக்க வேண்டிய செய்தி.












Click it and Unblock the Notifications