தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
சென்னை: தமிழ்நாட்டின் 26 வருட கனவு நிஜமாக போகிறது.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரயில் பயண நேரம் அடியோடு மாறப்போகிறது. இரட்டை ரயில் பாதை பயன்பாட்டிற்கு வருவதால் பயண நேரம் மட்டுமின்றி, புதிதாக ஆறு ரயில்கள் வரை விட முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவிற்கு அடுத்தபடியாக ரயில் பாதை கட்டமைப்பு சிறப்பாக உள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் ரயில் பாதை ஒரு சில பகுதிகளை தவிர (பெரம்பலூர் தவிர) பெரும்பாலான பகுதிகளில் ரயில் பாதை இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்ததம் 4 ஆயிரத்து 28 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதையான தண்டவாளங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் மிக முக்கியமான ரயில் வழித்தடங்களான சென்னை டூ கன்னியாகுமரி, சென்னை டூ கோவை என இருவழித்தடங்களுமே இரட்டை ரயில் வழித்தடங்களாக உள்ளன..

சென்னை-கன்னியாகுமரி இடையே 742 கி.மீ. நீளமுள்ள ரயில் பாதையில் தான் தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் பயணிக்கிறார்கள். எத்தனை ரயில் விட்டாலும் ஹவுஸ்புல் போர்டு போடவைக்கும் நெல்லையும், மதுரையும் உள்ள வழித்தடம் இதுதான்.. பிழைப்புத்தேடி வந்த பல லட்சம் தென்மாவட்ட மக்கள் சென்னையில் வசிப்பதால் ரயில் போக்குவரத்து, மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்த கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை என்பது. உடனே ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை.. தமிழ்நாட்டின் கனவு நிறைவேற 26 வருடங்கள் ஆகி உள்ளது.. 1998-ம் ஆண்டு சென்னை கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி பெரும் சவாலாக இருந்தது.
நீதிமன்றத்தை பலரும் நாடினார்கள்.. ஒருவழியாக நிலம் கையகப்படுத்திய அதிகாரிகள், மெதுவாகவே பணிகளை செய்து வந்தார்கள்.. அதேநேரம் பணிகள் முடிய முடிய மின்மயமாக்கல் பணிகளும் நடந்தது. பல தடைகளை தாண்டி கடந்த 2021-ம் ஆண்டு சென்னை-மதுரை இடையேயான 490 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு இரட்டை ரயில் பாதையில் போக்குவரத்து தொடங்கியது.
ஆனால் மதுரை-நெல்லை, நெல்லை-நாகர்கோவில், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை பணிகள் நடைபெற்று கொரோனா பாதிப்பால் முடங்கியது. கொரோனா ஊரடங்கு முடிந்தபின்னர் பணிகள் வேகம் எடுத்தது. ஆனால் திட்டமிடப்பட்ட 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பணிகள் முடியவில்லை. முதலில் மதுரை-நெல்லை இடையேயும், அடுத்து நெல்லை-ஆரல்வாய்மொழி இடையேயும் பணிகள் முடிந்தது. அண்மையில் ஆரல்வாய்மொழி-நாகர்கோவில், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையே பணிகள் முடிந்தது. இதையடுத்து
மத்திய ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் நேரில் வந்து ஆய்வு செய்து ஒப்புதலும் தந்துவிட்டார். இந்த பாதை காரணமாக தமிழக மக்களின் 26 ஆண்டு கால கனவு நினைவாகி உள்ளது.
இனி சிக்னலுக்காக எந்த ரயிலும் எந்த இடத்திலும் காத்திருக்க வேண்டியநிலை ஏற்படாது. எளிதாக ரயில்கள் வேகமாக சென்றுவிடும்.. ஒரே ஒரு ரயில் பாதை தான் இருக்கிறது என்று ரயில்கள் மதுரைக்கு அந்த பக்கம் காத்திருக்க தேவையில்லை. இதன் மூலம் சென்னையில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரிக்கு விரைவாக போக முடியும். வெறும் 10 மணி நேரத்தில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இனி போய்விட முடியும்.
தற்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல 12¼ மணி நேரம் ஆகிறது. ரயில்கள் இரட்டை பாதையில் பயணிக்கும் போது, பயணி நேரமும் பெரிய அளவில் குறைகிறது. அதுமட்டுமின்றி நெல்லை , கன்னியாகுமரிக்கு கூடுதலாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரயில் சேவைகள் மக்களுக்கு ஏற்ற வகையில் மாறினால் அதுதான் நிஜமான மகிழ்ச்சியான செய்தியாகும்.












Click it and Unblock the Notifications