இன்னும் 3 நாள் தான்! அக்கவுண்டுக்கே வரும் ரூ.1000! முதல்வர் ஸ்டாலின் அரசின் அடுத்த சிக்சர்! எங்கே?
சென்னை: இந்த நிதியாண்டு முதல் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. அவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி கோவையில் இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் இத்திட்டம் தொடர்பாக சென்னையில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையையும் இன்று முதல்வர் மேற்கொண்டுள்ளார்.
உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கையை அதிகரிக்க அறிமுகப்படுத்தப்பட்ட,'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தை' போல், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க 'தமிழ்ப் புதல்வன் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும். இவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

புதுமைப்பெண் திட்டத்தில் 3.28 லட்சம் மாணவிகள் பயன்பெறும் நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்திலும் 3.38 லட்சம் மாணவர்கள் என கணக்கில் கொண்டு மாணவனுக்கு மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.393.60 கோடி மற்றும் திட்டத்தை செயல்படுத்த நிர்வாக செலவாக ரூ.7.87 கோடி என ரூ.401.47 கோடி தேவைப்படுவதாகவும், எனவே ஓராண்டுக்கு ரூ.401.47 கோடி நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த நிதியாண்டு முதல், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்தி மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க, வழிகாட்டி நெறிமுறைகள் அடிப்படையில் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, இந்த கல்வியாண்டில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.360 கோடிக்கு நிதி ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டது.
இத்திட்டத்துக்கு அடுத்த நிதியாண்டில் தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டை, சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் கோரும்படியும் சமூக நலத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. இத்திட்டத்துக்காக மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க பிரத்யேக விண்ணப்பப் படிவம், ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட நிலையில், ஆதார் எண்ணை சார்ந்த கல்லூரியில் இருந்து பள்ளிக் கல்வித் துறையின் எமிஸ் மூலம் சரிபார்த்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தது உறுதி செய்யப்படும். அதன்பின், உயர்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பிக்கும் மாணவருக்கு பிரத்யேக எண் உருவாக்கி, மாணவரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்ற, அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், இதற்கு வருமான உச்சவரம்பு, இனம், ஒதுக்கீடு என எந்த ஒரு பாகுபாடும் இல்லை. 6 முதல் 12 வரை அரசுப் பள்ளியில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி பாடப்பிரிவில் படிப்பவராக இருத்தல் வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியிலும், 8 , 9 அல்லது 10-ம் வகுப்பு வரை படித்து ஐடிஐ பயிலும் மாணவர்களும் இதில் பயன்பெறலாம். உயர்கல்வி என்பது கலை அறிவியல், தொழில்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். தொலைதூரக் கல்வி, அஞ்சல்வழி, அங்கீகரிக்கப்படாத உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தில் ஊக்கத்தொகை பெற இயலாது. வேறு ஏதேனும் உதவித்தொகை பெற்று வருபவராக இருந்தாலும் இ்த்திட்டத்தில் பயன்பெறலாம். மற்ற மாநில பள்ளிகளில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.

ஒரே குடும்பத்தில் எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றாலும் அனைவரும் இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பாடப்பிரிவில் பயிலும் மாணவர்கள் முதல் 3 ஆண்டுகள் மட்டும் ஊக்கத் தொகை பெறலாம். பிற மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்இஆர் போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 9ஆம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் தொடர்வது தொடர்பாக தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மூத்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications