சிலிர்த்த உடல்! வாடிகன் திருச்சபையில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! உணர்ச்சி வசப்பட்ட அமைச்சர்கள்
சென்னை: இத்தாலியிலுள்ள வாடிகன் நகரில் இருக்கும் கத்தோலிக்க திருச்சபையில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ரோமில் தமிழ்த்தாய் பாடப்பட்டது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. இவருக்கு கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது .
கடந்த ஆண்டு தேவசகாயம் புனிதர் பதவிக்கு தகுதியானவர் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேராயர் தேவசகாயத்திற்கு இத்தாலியிலுள்ள வாடிகன் நகரிலுள்ள ரோமில் புனிதர் பட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.
முதல்முறை
போப் ஆண்டவர் இன்று காலை புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவித்தார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறையாகும். தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்துவர்கள் இடையே இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவரை கவுரவப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் ரோம் சென்றுள்ளார்.
அமைச்சர்கள்
மேலும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோதங்கராஜ், சிறுபான்மை நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் வாடிகனில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் புனிதர் பட்டம் பெறுவது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில்தான் புனிதர் பட்டத்தை அளிக்கும் முன் கத்தோலிக்க திருச்சபையில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த பாடல் அங்கு இருக்கும் கிறிஸ்துவ பெண் துறவிகள் மூலம் பாடப்பட்டது. அங்கு பல தமிழ் கிறிஸ்துவ பெண்கள் துறவிகளாக உள்ளனர். இவர்கள் மூலம் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையின்றி பாடப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது இதுவே முதல்முறை. அங்கு இருந்த திருச்சபை பாதிரியார்கள் எல்லோரும்.. இந்த பாடலுக்கு எழுந்து மரியாதை செய்தனர். ரோமில் தமிழ்த்தாய் பாடப்பட்டது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
அமைச்சர்கள்
அங்கு இருந்த தமிழ்நாடு அமைச்சர்கள் இருவரும் இந்த பாடலை உடல் சிலிர்க்க எழுந்து நின்று.. பெருமிதத்தோடு கேட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம் பிள்ளை. இவருக்குதான் இன்று கத்தோலிக்க திருச்சபையில் புனிதர் பட்டம் அறிவிக்கப்பட்டது . பிறப்பில் இந்துவான இவர் கடந்த 18ம் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் "லாசர்" (Lazarus) என்று பொருள்படும் வகையில் "தேவசகாயம்" என்ற பெயரை மாற்றிக்கொண்டார்.
யார் தேவசகாயம் பிள்ளை?
நாயர் பிரிவில் பிறந்த இவர், கிறிஸ்துவ மதம் மாறினார். அப்போது திருவாங்கூர் அரசரின் கட்டளை படி உயர் வகுப்பினர் மதம் மாற கூடாது. ஆனால் இவர் மீறி மதம் மாறியதால் அரசின் தண்டனைக்கு உள்ளானார் என்பது வரலாறு. இதனால் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மதம் மாறிய பின் சிறை தண்டனை பெற்றவர் கடுமையான கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. கிறிஸ்துவ மதம்தான் தன்னை காத்ததாக இவர் தெரிவித்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்தியாவில், முக்கியமாக தென்னிந்தியாவில் கிறிஸ்துவம் பரவ இவர் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தார். கிறித்துவ மதத்திற்கு மாறி உயிரை விட்ட இவரை போற்றும் வகையில் இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.