கொடி பறக்குது..தவெகவினருக்கு சர்ப்ரைஸ்! ஆகஸ்ட் 22ல் விஜய் செய்ய போகும் சம்பவம்!இது லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி பனையூரில் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் கொடி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதற்காக 40 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருந்து தற்போது அரசியல் தலைவராக அவதாரம் எடுத்திருக்கிறார் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய். தி கோட் படத்திற்கு பிறகு முழு அரசியலில் அவர் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே விஜய் அரசியல் ஆர்வத்தில் தான் இருக்கிறார். அதற்கு அச்சாரமாக தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். தொடர்ந்து அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது அமைப்பு, அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அன்றே கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை தொடங்க உள்ளதாகவும் விரைவில் அதன் கொள்கைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
மேலும் முழு அரசியலில் ஈடுபடும் பொருட்டு படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என தெரிவித்து இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டு இடைவெளியே இருக்கும் நிலையில் சினிமாவில் இனி நடிப்பது சிரமம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். இதற்கிடையே மாணவர்கள் சந்திப்பு ட்விட்டரில் வாழ்த்து அரசியல் என பிசியாக இருந்த விஜய் தீவிர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார். செப்டம்பர் மாதத்தில் அவரது முதல் மாநில மாநாடு நடக்கிறது.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் கடைசி வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் நடத்த அக்கட்சி நிர்வாகிகள் திட்டமிட்டுள்ள நிலையில், கட்சியின் கொடியை எப்போது விஜய் அறிமுகம் செய்வார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே கட்சிக் கொடி தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் “வாகை” மலர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரு வண்ணங்கள் கொண்ட 3 வகையான கொடிகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் ஒன்றை விஜய் தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றி வைக்கிறார் விஜய். இதற்காக சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. கொடிக் கம்பம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதில் தான் கொடியை ஏற்றுகிறார் விஜய்.
இந்நிலையில் கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 250 நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி அப்பகுதியில் அதிக ரசிகர்களும் கட்சியினரும் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications