ஆளுநர்களை நீக்க வேண்டுமா? விஜய்யின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை! தமிழிசை
சென்னை: விஜய்யின் முதல் அரசியல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டில் விஜய் பேசிய விஷயங்கள் பெரும் கவனம் பெற்றிருக்கின்றன. அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "ஆளுநர்களை நீக்க வேண்டும்" என்று விஜய் பேசியதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமா நடிகர்கள் திரைத்துறைக்குள் வருவது என்பது புதியது அல்ல. எம்ஜிஆர், என்டிஆர் தொடங்கி தற்போது உதயநிதி, கங்கனா வரை பலரும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பட்டியலில் புதியதாக விஜய் நுழைந்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகம் என தனது கட்சியின் பெயரை அவர் அறிவித்ததிலிருந்து, கட்சியின் கொள்கை என்ன? யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார்? அரசியல் வழிக்காட்டிகள் யார் யார்? என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக, நேற்று விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை விஜய் நடத்தி முடித்திருக்கிறார். இந்த மாநட்டில் தனது கட்சியின் கொள்கையாக, மதச்சார்பின்மையும், சமூகநீதியையும் அடையாளம் காட்டியுள்ளார். மேலும், அரசியல் வழிக்காட்டிகளாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலை அம்மாள் மற்றும் வேலுநாச்சியாரையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதில், பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த மாநாட்டில் அண்ணாவின் கட் அவுட் இடம்பெறவில்லை. அதேபோல அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் வழிக்காட்டியாக அவர் குறிப்பிடவில்லை. இப்படி இருக்கையில், தவெக திமுக, பாஜக மற்றும் தமிழ்தேசிய கட்சிகளுக்கு எதிரானது என அறியப்பட்டது. தனது முதல் அரசியல் உரையிலும் அவர் இதனை குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், தனது உரையில் ஆளுநர் பதவி கூடாது என்றும் கூறியிருந்தார். இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விஜய்யின் இந்த கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, "ஆளுநர்களை நீக்க வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை மாநிலத்திற்கு நல்லது செய்த ஆளுநர்களும் இருக்கிறார்கள். மரியாதைக்குரிய அம்பேத்கரை பாராட்டி விட்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் பதவியை அவ்வளவு இலகுவாக நீக்குவேன் என்று சொல்வது சரியல்ல" என்று கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் மீது தொடர்ந்து கடும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. திருக்குறள் தொடங்கி காரல் மார்க்ஸ் வரை ஆளுநரின் கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதும், திராவிடம் எனும் வார்த்தையை ஆளுநர் வாசிக்காமல் விடுத்ததும் பஞ்சாயத்தை கூட்டியிருந்தது. எனவே அரசியலமைப்பை மீறி ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்றும், ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாதது என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதே கருத்தை தற்போது விஜய்யும் பிரதிபலித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications