அண்ணா வளர்த்த தமிழ் அல்ல.. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ்.. அமைச்சர் ரகுபதி பேச்சுக்கு தமிழிசை பதிலடி
சென்னை: ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்கு சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? என்றும், இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக் களமாக வேதனைக் களமாக தி.மு.க. மாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறி அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது: தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியின் வார்த்தைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ் வேறு இந்து மதம் வேறு. தமிழர்கள் வேறு இந்துக்கள் வேறு என்ற பொருள்பட வேற்றுமையை விதைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் வளர்த்தது தான் இந்த தமிழ்... அண்ணா வளர்த்தது தமிழ் அல்ல. ஆண்டாள் வளர்த்தது தான் தமிழ்.. தமிழையும் இந்து மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இப்படி தொடர்ந்து பிரித்து ஆளும் கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
உங்கள் முதலமைச்சர் எத்தனை முருகன் கோவில்களுக்குச் சென்று இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?. ஏன் முருகன் திருவிழாக்களுக்கு கூட வாழ்த்து சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக முருகனையும் இந்து மதத்தையும் பிரிக்கும் இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பா.ஜ.க. தமிழகத்தை இந்துத்துவ பரிசோதனை களமாக மாற்றுகிறது என்று ஒரு பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்! உண்மை என்ன என்றால் இந்துக்களுக்கு தமிழகத்தை ஒரு சோதனைக்களமாக வேதனைக்களமாக தி.மு.க. மாற்றிக் கொண்டிருக்கிறது. 2026-ல் தி.மு.க. பெறப்போகும் தோல்விக்கு பின்பு அவர்கள் சந்திக்கும் காலம் வேதனை காலமாக இருக்கும் என்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications