தப்பா புரிஞ்சுகிட்டாங்க! இந்தி பற்றி அமித்ஷாவின் பேச்சுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை விளக்கம்
சென்னை: இந்தி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 37 வது நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு கூட்டத்தில் தலைமையேற்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியின் அவசியம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார்.
கரூரில் போடாத சாலைக்கு ரூ. 3 கோடி சுருட்டல்... எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் - 4 பேர் சஸ்பெண்ட்
அதில், "அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்து உள்ளார். நிச்சயமாக இது இந்தி மொழியின் முக்கியத்துவத்தை உயர்த்தும்.
இந்தி கட்டாயம்
மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டு உள்ளது. 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவை கட்டாயம் வழங்க வேண்டும். வட மாநிலங்களில் இருக்கும் 9 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் பேச்சு வழக்காக இந்திக்கு மாறி இருக்கின்றனர். 8 வட மாநிலங்களும் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க சம்மதம் தெரிவித்து இருக்கின்றன.
இணைப்புமொழி இந்தி
அலுவல் மொழியான இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கியமான அங்கமாக மாற்றுவதற்கான நேரம் இது. இந்தி மொழியை நாம் கொண்டு வருவது உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கற்க வேண்டும். பல்வேறு மொழிகளை பேசும் மாநில மக்கள் தங்களுக்கு இடையே உரையாடும்போது இந்தியில் பேச வேண்டும்." என்றார்.
அமித்ஷாவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது அப்பட்டமான இந்தி மொழி திணிப்பு என சமூக வலைதளங்களில் பொதுமக்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானின் எதிர்ப்பு
அமித்ஷாவின் கருத்து வெளியான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழன்னையின் படத்தை வெளியிட்டார். அதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் "தமிழே இந்தியாவில் இணைப்பு மொழி" என கூலாக பதிலளித்துவிட்டு நகர்ந்தார். இந்த நிலையில் நடிகர் சிம்புவும், இசையமைப்பாளர் அனிருத்தும் தமிழால் இணைவோம் என்று ட்விட்டரில் ஒருசேர பதிவிட்டு உள்ளனர்.
Recommended Video
தமிழிசை சவுந்தரராஜன் கருத்து
இந்த நிலையில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் அமித்ஷாவின் இந்தி குறித்த பேச்சுக்கு கருத்து தெரிவித்து இருக்கிறார். "இந்தி குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ள கருத்து தவறாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தாய்மொழிக்கு மரியாதை தரும் வகையிலேயே அமித்ஷா அவ்வாறு கூறி இருப்பார் என்று நினைக்கிறேன். அதே நேரம் இதுகுறித்து நான் எந்த கருத்தும் சொல்லக்கூடாது." என்றார்.