ரஜினிகாந்த் சொன்னது போல் மோடிதான் வலிமையான தலைவர்.. தமிழிசை பேச்சு
சென்னை: ரஜினிகாந்த் சொன்னது போல் பிரதமர் நரேந்திர மோடி வலிமையான தலைவர் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. பாஜக சார்பில் மோடியே பிரதமர் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளர் யாரென்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
இதுகுறித்து ஆலோசனை நடத்த வரும் 23-ஆம் தேதி காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடுகின்றனர். இதற்கான அழைப்பை சோனியா விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சிகள்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் ரஜினிகாந்த் கூறியது போல் பிரதமர் மோடிதான் வலிமையான தலைவர். அதனால் அவருக்கு எதிராக ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் கூடுகிறார்கள்.

ஒப்பு
அவருக்கு இணையான தலைவர்கள் வேறு யாரும் இல்லை. ஒருவரை எதிர்த்து தேர்தல் முடிவுகள் வரும் அன்றைக்கு இத்தனை தலைவர்கள் ஒன்று சேர்ந்து இவர் இருக்கக் கூடாது என முடிவு செய்தால் அவர்கள் எதிர்க்கும் அந்த தலைவர் மோடி எத்தனை பலம் பொருந்தியவர் என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்றுதான் தெரிகிறது என்றார் தமிழிசை.

234 தமிழக சட்டசபை
கடந்த மாதம் சென்னையில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது இலக்கு 234 தமிழக சட்டசபை தொகுதிகள்தான் என்றார்.

எதிர்க்கட்சிகள்
மோடியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ஒன்று திரள்கிறதே அதுகுறித்து உங்கள் கருத்து என்ன என ரஜினியிடம் கேட்டனர். அதற்கு அவர், பத்துபேர் சேர்ந்து ஒருவரை வீழ்த்த வந்தால், அதில் பத்து பேர் பலசாலியா? அந்த ஒருவர் பலசாலியா என்று ரஜினி கேள்வியாகக் கேட்டு மோடிதான் பலசாலி என்பதை சூசகமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications