தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் எம்டி & சிஇஒ திடீர் ராஜினாமா.. காரணம் என்ன?
சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கணக்கில் ₹9000 கோடி தவறுதலாக செலுத்தப்பட்டு, திரும்ப பெறப்பட்டது சர்சையான சூழ்நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சென்னை கோடம்பாக்கத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். டிரைவர் ராஜ்குமாருக்கு செப்டம்பர் 9 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென தமிழ்நாடு மெர்க்கெண்டைல் வங்கியில் இருந்து எஸ்எம்எஸ் ஒன்று வந்துள்ளது.

அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் இருந்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆகி உள்ளதாக குறிப்பிடப்படிருக்கிறது. இதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த டிரைவர் ராஜ்குமார் அதில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாமல் தடுமாறி உள்ளார்.
அதன் பின் தனது வங்கிக் கணக்கில் வெறும் 105 ரூபாய் இருந்த நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்திருக்கிறார். எனினும், தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு ரூ. 21,000 பணம் அனுப்பி பார்த்துள்ளார். அந்த பணம் போய் இருக்கிறது. அப்போது தான் 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து டிரைவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த அடுத்த சில நிமிடங்களில், மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது.
முன்னதாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதாக போனில் கூறியுள்ளனர்.

இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை அடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும், டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ. 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த விவகாரத்தில் டிரைவர் ராஜ்குமார் அடுத்தடுத்து புகார்களை தெரிவித்தார். இதையடுத்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்இருந்து தனிநபர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு எப்படி 9000 கோடியை செலுத்தமுடியும்.. அது யாருடைய பணம். எப்படி இவ்வளவு பணத்தை வங்கி கணக்கை சரிபார்க்காமல் போட முடியும். கணிணியில் ஏற்பட்ட தவறா என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இந்த சூழலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓவும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் திடீரென ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications