அக்டோபர் 14ல் தொடங்கும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அக்டோபர் 14ஆம் தேதி சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறிய அப்பாவு, எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
நடப்பாண்டில் தமிழக சட்டசபை முதல் கூட்டம் ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதால், சர்ச்சை உருவாகியது. இதன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 4 நாட்கள் நடைபெற்றது.

இதன்பின் மார்ச் 14ஆம் தேதி 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதன்பின் மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மார்ச் 17 முதல் மார்ச் 21 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதன்பின் மார்ச் 24 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை துறை ரீதியிலான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
55 துறைகள் மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், பின்னர் சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத இடைவெளியில் மீண்டும் சட்டசபை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், தற்போது அக்டோபர் 14ஆம் தேதி சட்டசபை கூட்டம் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், சட்டசபை விதி 24 (1)ன் கீழ் சட்டப்பேரவை கூட்டம் அக்டோபர் 14ஆம் தேதி காலை 9.30 மணி தொடங்க இருக்கிறது. அன்றைய நாளில் வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி உட்பட 8 பேரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
அதன்பின் 2025-26ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டம் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் என்பதால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications