நாளை மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
சென்னை: துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக சட்டசபை கூட்டம் மீண்டும் நாளை தொடங்குகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலானது. அதையடுத்து 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கலானது. இரு பட்ஜெட்டுகள் மீதும் 24 ஆம் தேதிவரை விவாதம் நடைபெற்றது.
இதில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்திருந்தனர். இந்த நிலையில் துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. இது மே 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நீர் வளத் துறை
முதல் நாளான நாளை புதன்கிழமை நீர்வளத் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் பேசுவார்கள். கூட்டத்தின் இறுதியில் அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் பதில் கொடுப்பார்.

அனல் பறக்கும் விவாதங்கள்
அனல் பறக்கும் விவாதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் முதல்வர் ஸ்டாலின் பதில் அளிப்பார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் பேசுவார். ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும்.

110 விதியின் கீழ்
முக்கிய அறிவிப்புகள் இருந்தால் 110 விதியின் கீழ் அவற்றை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார். சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதனால் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றே தெரிகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இனி விவாதங்கள் அனல் பறக்கும். ஏப்ரல் 7ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகத் துறை மீதான மானியக் கோரிக்கை, ஏப்ரல் 8 ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு துறை, ஏப்ரல் 11 ஆம் தேதி பள்ளி மற்றும் உயர் கல்வித் துறை, ஏப்ரல் 12 ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள், ஏப்ரல் 13 ஆம் தேதி வேளாண் துறை, ஏப்ரல் 27ஆம் தேதி தொழில் துறை, மே 9 ஆம் தேதி நிதித் துறை ஆகியவற்றின் மீதான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications