கர்நாடகா நியமனம், இலங்கை பயணம்..ஈரோடு கிழக்கு தேர்தலின் போது தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பால் அண்ணாமலை!
சென்னை: தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராக நியமனம், இலங்கை பயணம் என தமிழ்நாட்டுக்கு வெளியே, தமிழ்நாட்டின் தொடர்பு எல்லைக்கு அப்பால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படுபிசியாக வலம் வருகிறார்.
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல். இத்தேர்தலில் திமுக கூட்டணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்காகவே பெரும் அமைச்சர்கள் படை, திமுக மூத்த தலைவர்கள் அணி என முழு வீச்சில் திமுக களமிறங்கி உள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்படும் முன்னரே, திமுக காங்கிரஸுக்காக பிரசாரம் செய்தது. திமுகவின் அத்தனை கூட்டணி கட்சிகளும் ஒட்டுமொத்தமாக ஈரோடு களத்தில் இறங்கி பிரசாரம் செய்து வருகின்றன.
அதேநேரத்தில் அதிமுக- பாஜக கூட்டணியில் தொடக்கம் முதலே குழப்பம் இருந்து வருகிறது. அதிமுகவின் இரு அணிகளும் வேட்பாளரை நிறுத்தியது, அதிமுகவின் குழப்பங்களால் பாஜக நிலைப்பாடு எடுக்க முடியாமல் தவறியது என்பது ஒருபக்கம். இன்னொரு பக்கம், தமிழ்நாடு பாஜக இந்த குழப்பத்தை பயன்படுத்தி களமிறங்கி வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும்; அப்படி செய்திருந்தால் திமுக- பாஜக இடையே மோதல் என உருவாக்கி அதிமுகவை முழுமையாக அடக்கி வைத்திருக்கலாம். அந்த வாய்ப்பை தமிழ்நாடு பாஜக தவறவிட்டது. இதனைத்தான் டெல்லிக்கும் சொல்லி இருக்கிறோம் என்கின்றனர் சீனியர்கள்.
ஆனால் தமிழ்நாடு பாஜக தரப்போ, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் வெற்றி இல்லை என்பது தெரியும். இதனைத்தான் சர்வேக்கள் மூலம் டெல்லிக்கு தெரியப்படுத்தினோம். அதை டெல்லி ஏற்றுக் கொண்டுவிட்டதே என்கின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக அண்ணாமலை பணியாற்றி இருக்கிறார். அப்போது கர்நாடகா சிங்கம் என புகழப்பட்டவர் அண்ணாமலை. அதனால் அண்ணாமலைக்கு இந்த பொறுப்பை டெல்லி மேலிடம் கொடுத்திருக்கிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
கர்நாடகா நியமனாத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அரசியல் கட்சிகள் விடுத்த அழைப்பை ஏற்று தாம் இலங்கை செல்வதாக அண்ணாமலை கூறியிருந்தார். தற்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் அதிகாரப்பூர்வமான பயணத்துடன் அண்ணாமலையும் இணைந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் அதிமுக்கியாமான ஈரோடு கிழக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் கர்நாடகா பொறுப்பாளராக நியமனம், இலங்கைக்கு வெளியே பயணம் என தமிழ்நாட்டு எல்லைக்கு அப்பாலேயே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ரவுண்டப் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications