3 மாதங்களாக பட்ஜெட் வேலைகளில் மும்முரம் காட்டிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!
சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த 3 மாதங்களாக பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனி கவனம் செலுத்து வந்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நிதி அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் பதவி யாருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதாவது கொரோனாவின் 2ஆவது அலையின் உச்சத்தை சமாளிக்கும் நிலையும், கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நிலையும் திமுகவுக்கு சவாலாக இருந்தது.
இந்த நிலையில் சுகாதாரத் துறைக்கு மா சுப்பிரமணியனையும் நிதித் துறைக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனையும் ஸ்டாலின் நியமித்தார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்- இவரது தாத்தா பிடி ராஜன் மதராஸ் மாகாணத்தின் முதல்வராக இருந்தவர். இவரது தந்தை பிடிஆர் பழனிவேல், கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர்.

ஜிஎஸ்டி கவுன்சில்
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனோ வெளிநாட்டில் பொருளாதாரம் படித்தவர். வங்கிகளின் உயரதிகாரியாகவும் பணியாற்றியவர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் சேர்ந்ததுதான் ஒன்றிய அரசு என வாதிட்டவர். ஒன்றிய அரசை தொடர்ந்து விமர்சித்தவர். மத்திய அரசின் பொருளாதார கொள்கையை விமர்சித்து வருபவர். இவர் இன்றைய தினம் தாக்கல் செய்யும் பட்ஜெட் எப்படியிருக்கும் என்பதை கடந்த ஜூன் மாதமே சொல்லிவிட்டார்.

பட்ஜெட் வரைவுகள்
அதாவது பொதுவாக பட்ஜெட் வரைவுகள் அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று முதல்வர் இறுதி செய்தவுடன் அதை ஐஏஎஸ் அதிகாரிகள்தான் எழுதுவர். தமிழில் தயாரிக்கப்படும் பட்ஜெட் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும். இதுகுறித்து கடந்த ஜூன் மாதம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டரில் கூறுகையில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவரவுள்ள தமிழ்நாடு பட்ஜெட் முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையுடன் உருவாகி வருகிறது. இது பிடிஆர் பட்ஜெட் இல்லை. இது முதல்வரின் பட்ஜெட்.

ஐஏஎஸ் அதிகாரிக்கு மாற்றாக..
ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக ஐஏஎஸ் அதிகாரிகள் எழுதி தரும் பட்ஜெட்டிற்கு மாற்றாக ஒரு அரசியல்வாதி எழுதியதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். எனவே இந்த பட்ஜெட்டை இவரே தன் கைப்பட எழுதியுள்ளது தெரிகிறது. இதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 3 மாதங்களாக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தார். தமிழக பொருளாதாரத்தை சீரமைக்க 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வழிகாட்டுதல்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனைகள், மக்களின் எதிர்பார்ப்புகள், தமிழக நலன் ஆகியவற்றை கொண்டு பிடிஆர் பட்ஜெட் பணிகளில் மும்முரம் காட்டியிருந்தார்.
Recommended Video

தமிழக மக்களின் எதிர்பார்ப்பு
இந்த பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கிறதா என்பதை பார்ப்போம். திமுக அரசு தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட் மற்ற மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் முன்மாதிரியாக இருக்கிறதா என்பது இனிதான் தெரியவரும். இதன் மூலம் பொருளாதாரம் குறித்து மத்திய அரசுக்கே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்லித் தர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.












Click it and Unblock the Notifications