ஃபனி புயலால் பாதிப்பா.. உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை
சென்னை: ஃபனி புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக, சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில், உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது. இது ஃபனி என்ற பெயருடன் அடுத்து புயலாக மாற உள்ளது. இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் அவசர ஆலோசனை இன்று மதியம் 12.15 மணியளவில், தலைமைச் செயலகத்தில் துவங்கியது.
வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உட்பட பல முக்கிய அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர். புயல் காரணமாக தமிழகத்தின், வட மாவட்டங்களில் பாதிப்பு இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தை நோக்கி... 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் புயல்... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை தொடர்பாக, இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.