பினராயியை சந்திக்க கேரளா செல்கிறார் எடப்பாடி பழனிசாமி...!
சென்னை: நதிநீர் பங்கீடு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
தமிழகம்-கேரளா இடையே முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட பிரச்சனைகள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும் முடிவில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வரை நேரில் சந்திக்க உள்ளார்.

இதற்காக இந்தவாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரம் செல்ல உள்ளார். அவருடன் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடன் செல்கிறார்கள். மேலும், முல்லைப் பெரியாறு தேனி மாவட்டத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், அந்த மாவட்டத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாக உள்ள ஜக்கையனும் முதல்வருடன் பினராயியை சந்திக்க உள்ளாராம்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசின் விருந்தினர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. நதிநீர் பிரச்சனைகள் தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ஏற்கனவே இரு மாநில முதலமைச்சர்களும் சென்னையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. அதில் அப்போது சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இந்த முறை இரண்டாவது முறையாக சந்திப்பு நடைபெறவுள்ளது.
அதில், பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுபிப்பது, முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை தனது ஆட்சிக்காலத்தில் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு பெற்றுக்கொடுத்தால் அது காலத்திற்கும் தனது பெயரை வரலாற்றில் நிலைநிறுத்தும் என நினைக்கிறாராம்.












Click it and Unblock the Notifications