சட்டசபை நேரலை எப்போது? 'அதிமுக செய்யாததை நாங்கள் செய்வோம்..' முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. சபாஷ்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த நிலையில், இதுவரை சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை. இந்நிலையில், இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

சட்டசபை நேரலை
தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் போது, அதன் நிகழ்வுகளையும் விவாதங்களையும் அரசு நேரடியாக ஒளிபரப்பு செய்வதில்லை. அரசு சார்பில் அளிக்கப்படும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களே அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படுகின்றன. சட்டசபையில் தங்கள் உறுப்பினர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உள்ளதால், இதனை எடிட் செய்யாமல் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது. இதற்கு அனைவரும் கூறிய உதாரணம் நாடாளுமன்ற நேரலை!

நாடாளுமன்றம்
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரைக் கடந்த 1989ஆம் ஆண்டிலேயே குடியரசுத் தலைவர் உரை, கேள்வி நேரம் ஆகியவை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து 1984ஆம் ஆண்டு முதல் மக்களவை, மாநிலங்களை ஆகிய இரண்டு அவைகளின் கேள்வி நேரமும் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. முதலில் டிடி சேனில் இந்த நிகழ்வுகள் ஒளிபரப்பப்பட்ட நிலையில், பின்னர் 2006இல் லேக்சாபா நேரலைக்கு தனி சேனலும், 2011இல் ராஜ்ய சபா நேரலைக்குத் தனி சேனலும் தொடங்கப்பட்டன. இந்த இரண்டு சேனல்களையும் ஒன்றாக இணைத்து புதிதாக சன்சாத் டிவி என்ற தனி சேனலை பாஜக அரசு விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளது தனிக்கதை.

அதிக செலவாகும்
நாடாளுமன்ற விவாதங்கள் நேரலை செய்யும்போதும் சட்டசபை விவாதங்களை ஏன் நேரலை செய்யக் கூடாது என்ற கேள்வியே பலராலும் முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாகக் கடந்த 2015இல் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யவேண்டும் என்றால், அதிக செலவு ஆகும். எனவே அது சாத்தியமல்ல என்று தமிழ அரசு பதிலளித்திருந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தமிழ்நாட்டில் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த அரசியல் தலைவர் என்றால் அது தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். அப்போது தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தால், இலவசமாகவே தனக்குச் சொந்தமான சேனலில் ஒளிபரப்ப தயாராக உள்ளதாகக் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "சட்டசபையின் அனைத்து திசைகளிலும் கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தாலும் எந்த டிவியிலும் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள, மக்களுக்கு உரிமை உள்ளது. எனவே, சட்டசபை நிகழ்ச்சிகளை டிவி அல்லது இணையத்தில் நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சட்டசபை செயலருக்கு உத்தரவிட வேண்டும்" என வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஸ்டாலின் வலியுறுத்தல்
பேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களில் வெறும் மொபைல்போனைக் கொண்டு நேரலையில் ஒளிபரப்பும் தொழில்நுட்பம் வந்தபோதும் கூட, சட்டசபை நேரலை வரவில்லை. கடந்த 2017இல் அதிமுக அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பெரும் குழப்பம் ஏற்பட்டது. அப்போது அவை காவலர்கள் தன்னை இழுத்துத் தள்ளி, சட்டையைக் கிழித்ததாக அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், சட்டசபை நிகழ்வுகள் நேரலை செய்யப்பட்டிருந்தால் அங்கு என்ன நடந்தது என்பது பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கும் என்றும் திமுக தலைவர்கள் குறிப்பிட்டனர்.

பயமா முதல்வரே
அப்போது முதலே சட்டசபை நிகழ்வுகளை அரசு வெட்டி வெட்டி வெளியிடுவதாகவும் முழு நிகழ்வை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. திமுக ஆட்சியில் சட்டசபை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் அறிவித்தது. தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது, ஆனால் சட்டசபை நேரலை மட்டும் வரவில்லை. இதனைப் பலரும் கடுமையாக விமர்சித்தனர். மேலும், #பயமாமுதல்வரே என்றே ஹேஷ்டேக்கும் இணையத்தில் டிரெண்ட் செய்யப்பட்டது.

கமல் சாடல்
தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட நேரலையை ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை என மக்கள் நீதி மய்ய தலைவர் கமலும் கேள்வி எழுப்பியிருந்தார். கமல் தனது ட்விட்டரில், "பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும்" என விமர்சித்திருந்தார். ஆனால், இதற்கும் அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை.

முதல்வர் விளக்கம்
தற்போது சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாகச் சட்டசபையிலேயே கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சபை நிகழ்வுகள் ஏன் நேரலை செய்யப்படுவதில்லை எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் சட்டசபை நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்று ஒரு முறை அல்ல பல முறை நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. இங்கு கலைவாணர் அரங்கில் சில குறிப்பிட்ட காரணங்களால் எங்களால் நேரலை செய்ய முடியவில்லை. புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை நடைபெறும்போது, நிச்சயமாக அதை நாங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வோம்" என்று பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications