அப்போ இதுதான் பிளானா? தேசிய அரசியலுக்கு அழைத்த திருமா..முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதில் என்ன தெரியுமா?
சென்னை: வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற விசிக விருதுகள் வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி வைத்த கோரிக்கையும் அதற்கு முதல்வர் ஸ்டாலின் சொன்ன பதிலும் தான் இணையத்தைக் கலக்கி வருகிறது.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 2021-ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பெரியார் விருதும் வழங்கப்பட்டது.

தலைவர்கள் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். அடுத்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தான் திருமாவளவனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டவன் என்று கூறியுள்ளது அரசியல் களத்தில் பல யூகங்களைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான இருவரது பேச்சுகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

திருமா பேச்சு
இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய தொல். திருமாவளவன், "திமுக உடன் இணைந்து நின்றால் தான் பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முடியும். இது தான் விசிகவின் அரசியல் நிலைப்பாடு. அடுத்து 2024 மக்களவை தேர்தலில் தப்பித் தவறி பாஜக வென்று மீண்டும் ஆட்சியை அமைத்தால், அதன் பிறகு தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தமிழ்நாட்டிற்கும் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

ஒரே வேண்டுகோள்
இந்த கூட்டத்தின் மூலம் தமிழக முதல்வர் அண்ணன் மு.க. ஸ்டாலினுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று தான்! அகில இந்தியா அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைக்கும் ஆற்றலும் தகுதியும் உங்களுக்குத் தான் இருக்கிறது. நான் மேடைக்காக இதைப் பேசவில்லை. நாட்டை காப்பாற்றும் பொறுப்பு உணர்வுடன், அரசியல் அமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பு உணர்வுடன் பேசுகிறேன்.

ஆர்எஸ்எஸ் திட்டம்
அவர்களின் செயல்திட்டங்கள் மிகவும் ஆபத்தானவை, ஒரே தேசம் ஒரே கலாசாரம் என்கிறார்கள். ஒரே தேசம் ஒரே கட்சி என்கிறார்கள். ஒரே கட்சி ஒரே ஆட்சி என்கிறார்கள். மாநிலக் கட்சிகளும் தேவையில்லை. மாநில அரசுகளும் தேவையில்லை என்பதை நோக்கி அவர்கள் செல்கிறார்கள். இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்திட்டங்கள். அதை பாஜக இப்போது நடைமுறைப்படுத்துகிறார்கள். இப்போது அவர்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்துள்ளனர். அதிமுகவை விட நாங்கள் தான் வலுவான எதிர்க்கட்சி என்பதைக் காட்டிக் கொள்ளத் தொடர்ந்து எதையாவது பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

தேசிய அரசியல்
ஆனால் இவர்களை பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாமல் தேசிய அரசியலில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இவர்களின் அவதூறுகளைப் பொருட்படுத்தாமல் நீங்கள் தேசிய அரசியலில் பயணம் செய்ய வேண்டும். பெரியார், அண்ணா, கருணாநிதி விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாட்டைப் பற்றும் பாதுகாத்தால் போதும் என இருந்தால், பாஜக பிற மாநிலங்களில் வென்று வந்துவிடுவார்கள். காங்கிரஸ், பாஜக இல்லாத ஒரு அணியை உருவாக்க வேண்டும் என ஒரு சிலர் முயல்கின்றனர். ஆனால், திமுக அப்படிப்பட்ட முயற்சிக்குத் துணைநின்றுவிடக் கூடாது என உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒரே கோரிக்கை
காங்கிரஸ் இல்லாத ஒரு அணியை உருவாக்கினால் அது பாஜகவுக்கே சாதமாக அமையும். அப்போது மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும். பெரியார், அண்ணா, கருணாநிதி வழிவந்த முதல்வரிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கை இது தான். 2024 மக்களவை தேர்தலுக்கான வியூகத்தை அமைக்கும் இடத்தில் கருணாநிதியைப் போல இருந்து நீங்களும் செயல்பட வேண்டும் என்பதே விசிக வைக்கும் கோரிக்கை" என்று பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் சூசகம்
அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், " தொல் திருமா என்னைத் தேர்ந்தெடுத்து, அம்பேத்கர் விருதை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என நேரடியாக வந்து குறிப்பிட்டார். அவரது அன்புக்கு நான் என்றைக்குமே கட்டுப்பட்டவன் தான். அவரது பேச்சுக்கும் நான் கட்டுப்பட்டவன் தான். இதற்கு மேல் நான் எதையும் கூற தேவையில்லை" என்று கூறியுள்ளது அரசியல் அரங்கில் பல புதிய யூகங்களைக் கிளப்பியுள்ளது. இதன் மூலம் விரைவில் தேசிய அரசியலில் பெரிய என்ட்ரியை மு.க.ஸ்டாலின் கொடுக்கவுள்ளார் எனக் கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.

தேசிய அரசியல்
தேசிய அரசியலிலும் கடந்த சில மாதங்களாகவே பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. முதலில் டெல்லி சென்ற மம்தா, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசியிருந்தார். இருப்பினும், அதில் எந்தவொரு முன்னேற்றும் ஏற்படவில்லை. அதன் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர். இந்தச் சூழ்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை வைத்துக் கொண்டே மே. வங்க முதல்வர் மம்தா தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே இல்லை எனக் கூறியது குழப்பத்தை அதிகப்படுத்தியது.

முக்கிய மீட்டிங்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சென்னை வந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துச் சென்றார். இது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக உருவாகும் கூட்டணி குறித்த பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருந்தது. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications