3 நாள்.. 75 கி.மீ நடைபயணம் தொடங்கும் தமிழக காங்கிரஸ்! அரசியல் சாசனம் காக்க.. கேஎஸ் அழகிரி அறிவிப்பு!
சென்னை : சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கொள்ள உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாடு முழுவதும் 3,570 கி.மீ தொலைவுக்கு மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கியது.
ராகுல் காந்தி, தமிழகம் கடந்து கேரளாவில் தற்போது நடைபயணத்தைத் தொடர்ந்து வருகிறார். 15வது நாளாக இன்று நடைபயணம் நடைபெற்று வருகிறது.
மாபெரும் நடைபயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்திற்குச் சென்று வணங்கினார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் தலைவர் பதவி.. அசோக் கெலாட்டுக்கு சோனியா காந்தி ஆதரவு ஏன்? பின்னணியில் 5 முக்கிய காரணம்
தமிழக காங்கிரஸ் நடைபயணம்
இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவன் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ நடைபயணத்தை அறிவித்துள்ளது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி. ராகுல் காந்தி ஒருபுறம் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கக் கோரி தமிழக காங்கிரஸ் இந்த நடைபயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.
அரசியல் சாசனம் மீது தாக்குதல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பா.ஜ.க தொடுத்து வருகிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பா.ஜ.க தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கிற செயலாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழி வாங்கப்பட்டு வருகிறார்கள்.
75 கி.மீ நடைபயணம்
இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு இந்திய அரசமைப்புச் சட்டம்தான். இதன் மூலமே பொது மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் காப்பாற்றப்படும். இந்தப் பின்னணியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., துறை, எஸ்.டி. துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், சிறுபான்மைத் துறை, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்பு சாராத் தொழிலாளர் பிரிவு என எட்டு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
சென்னை - ஸ்ரீபெரும்புதூர்
இந்தப் பயணம் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நடைபயணம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தொடக்கி வைக்க இருக்கிறேன். இந்தத் எழுச்சிமிக்க பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று வெற்றிபெற அனைவரது ஆதரவையும் கோருகிறேன்.
மூத்த தலைவர்கள் பங்கேற்பு
இந்நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கே. ராஜூ மற்றும் அந்த அமைப்புகளின் தேசியத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.