நல்லா பாருங்க.. எத்தனை வடை இருக்கு.. ஒரே போட்டோ.. மோடியை மொத்தமாக கலாய்த்த தமிழக காங்கிரஸ்
சென்னை: ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பதை, வாயிலேயே வடை சுடுவதாக பொருள்படும் படி தமிழக காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
பேஸ்புக், டிவிட்டர் என தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரியளவில் கவனம் ஈர்த்திருப்பதுடன் அதிகம் பகிரப்பட்டும் வருகிறது.
இதனிடையே இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவும் காங்கிரசுக்கு எதிராக சில பதிவுகளை வெளியிட்டு வருகிறது.

பிரதமர் மோடி
இந்தியா முழுவதும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பை வாயிலேயே வடை சுடுகிறார் என்கிற பொருள்படும் படி கிண்டல் அடித்திருக்கிறது தமிழக காங்கிரஸ் கமிட்டி. நாளிதழ் ஒன்றில் இது தொடர்பாக வெளியான செய்தியில் மசால் வடை ஒன்றை வைத்து, படத்தில் மொத்தம் எத்தனை வடைகள் என வினவி தமிழக காங்கிரஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

பத்து லட்சத்து ஒன்று
அதற்கு கமெண்ட்களில் பதிலளித்து இருக்கக் கூடியவர்களில் பெரும்பாலானோர் பத்து லட்சத்து ஒரு வடை என்றும், பத்துலட்சம் பேருக்கும் ஒரே வடை தான் எனவும் நக்கலும் நையாண்டியுமாக கூறியுள்ளனர். ஓஹோ இதற்கு பேர் தான் வாயிலேயே வடை சுடுவதா என்றும் சிலர் கமெண்ட் அடித்துள்ளனர். வேலை வாய்ப்பு தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பையும் வடையையும் ஒப்பிட்டு தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள இந்த ட்விட்டர் பதிவு பாஜக தரப்பை கொதிப்படைய வைத்துள்ளது.

தமிழக இளைஞர்கள்
காங்கிரஸ் ஒரு புறம் இப்படி கேலியும் கிண்டலும் செய்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ற அறிவிப்பை சுட்டிக்காட்டி, இதனை தமிழக இளைஞர்கள் முறையாக பயன்படுத்தி பயன்பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் தான் முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளன. ஒன்று வேலையில்லா திண்டாட்டம், மற்றொருன்று விலைவாசி உயர்வு. ஆகையால் தான் இப்போதே இந்த விவகாரங்கள் மீதும் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications