மூவாயிரத்தை கடந்தது சென்னை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.. தமிழக மொத்த பாதிப்பில் 50% இங்குதான்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6009 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதில் 50 சதவீதம் அளவுக்கு சென்னையில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட புள்ளி விவரத்திலிருந்து சில முக்கிய அம்சங்கள் இதோ:
1,605 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் காரணமாக மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை, இதுவாகும்: செங்கல்பட்டு 26, சென்னை - 399, கடலூர் 34, திருவள்ளூர் 75
தர்மபுரி - 2, காஞ்சிபுரம் - 8, கன்னியாகுமரி - 8, கிருஷ்ணகிரி - 2, மதுரை - 2, ராமநாதபுரம் - 1, தென்காசி - 1, தேனி - 1, திருப்பத்தூர் - 1, திருவண்ணாமலை - 11, திருநெல்வேலி - 4, திருச்சி - 1, விழுப்புரம் - 21, விருதுநகர் - 3 இவ்வாறு மொத்தம் 600 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா.. மக்கள் அச்சப்பட வேண்டாம்.. ஏன் தெரியுமா? விஜயபாஸ்கர் பேட்டி
சென்னையில் 2,644 ஆக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்துள்ளது. அதாவது மொத்த தமிழக பாதிப்பான 6009 என்பதில், பாதிக்கும் மேல், சென்னை என்ற ஒரே மாவட்டத்தில்தான் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.