திடீர் வேகம்.. 9000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. சென்னையில் நிலைமை மிக மிக மோசம்.. ஆனால்!
சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் திடீரென உயரத் தொடங்கியுள்ளது. தினசரி கேஸ்கள் 9 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், சென்னையில் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதத்திற்குப் பின்னர் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் பல புதிய தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வந்தது.
இந்நிலையில், ஓமிக்ரான் கொரோனாவால் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. இதனால் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து ஜன. 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்குப் பிறகு ஊரடங்கு மேலும் கடுமையாக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
இந்நிலையில், நேற்று 6983 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினசரி பாதிப்பு 8981ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட சுமார் 1998 அதிகம் ஆகும். மொத்தம் 1.36 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து திரும்பிய 5 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேர் மற்றும் அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல வெளிமாநிலங்களில் இருந்து வந்த 28 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதையெல்லாம் சேர்ந்து மாநிலத்தில் மொத்த தினசரி வைரஸ் பாதிப்பு 8981ஆக உயர்ந்துள்ளது.

ஓமிக்ரான் கேஸ்கள்
தமிழ்நாட்டில் இதுவரை 117 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. அந்த அனைத்து ஓமிக்ரான் நோயாளிகளும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேபோல பாசிட்டிவ் விகிதமும் அச்சமூட்டும் வகையில் 5ஐ தாண்டியுள்ளது. மாநிலத்தில் ஒட்டுமொத்த பாசிட்டிவ் விகிதம் 5.4ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 11.5ஆகவும், செங்கல்பட்டில் 10.9ஆகவும் திருவள்ளூரில் 10.5ஆகவும் பாசிட்டிவ் விகிதம் உள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று 22,828ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இன்று 30,817ஆக அதிகரித்துள்ளது.. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 984 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 27,08,763 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு
கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் போதிலும், நல்வாய்ப்பாக கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கவில்லை, தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 3 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். அதிகபட்சமாகச் செங்கல்பட்டில் 3 பேரும் கோவையில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,833 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
மாவட்ட ரீதியான பாதிப்பில் தலைநகர் சென்னை மீண்டும் மிக மோசமாக நிலைக்குச் சென்றுள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 4531 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேலாகும். சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 1039 பேருக்கும் திருவள்ளூரில் 514 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தென்காசி மாவட்டங்களில் மட்டும் தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் உள்ளது.












Click it and Unblock the Notifications