இன்று தமிழகத்தில் வெறும் 2,296 பேருக்கு மட்டுமே கொரோனா..ஆக்டிவ் கேஸ்களும் 42,000க்கு கீழ் குறைந்தது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2296 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் 41,699ஆக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு மளமளவென குறைந்து வருகிறது. இதனால் திரையரங்குகள் 100% இருக்கைகள் உட்பட கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் 3 முக்கிய செயற்கைகோள்கள்.. நாளை விண்ணில் ஏவும் இஸ்ரோ.. என்ன சிறப்பு?
அதேபோல தமிழக மருத்துவத்துறை அமைச்சரும் கூட, மாநிலத்தில் கொரோனா 3ஆம் அலை முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதலாம் என்று குறிப்பிட்டிருந்தார். மறுபுறம் வேக்சின் பணிகளையும் அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தினசரி பாதிப்பு
இதனால் தமிழ்நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மளமளவெனக் குறைந்து வருகிறது. அதிகபட்சமாக மாநிலத்தில் கடந்த ஜன. 22இல் தினசரி கொரோனா பாதிப்பு 30,700வரை சென்றது. அதன் பின்னர் குறையத் தொடங்கிய கொரோனா நேற்று 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. இன்று அது மேலும் குறைந்து வெறும் 2,296 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இன்று 1.02 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் மொத்தம் 2296 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 34,36,262 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
தினசரி கொரோனா பாதிப்பு குறைவதால் ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. நேற்று 47,643ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள் இன்று 41,699ஆக குறைந்துள்ளது. அதேபோல ஒரே நாளில் மொத்தம் 8,229 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,56,648ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு
கொரோனா உயிரிழப்புகளும் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஜன. மாதம் தினசரி கொரோனா உயிரிழப்புகள் 50 வரை சென்ற நிலையில், இன்று அது 11ஆக குறைந்துள்ளது. அவர்களில் 4 தனியார் மருத்துவமனைகளிலும் 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,915ஆக உயர்ந்துள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
ஓமிக்ரான் அலை ஏற்பட்ட சமயத்தில் 20 தாண்டிய பாசிட்டிவ் விகிதம் நேற்று 3க்கு கீழ் குறைந்தது. நேற்று 2.9ஆக இருந்த பாசிட்டிவ் விகிதம் இன்று மேலும் குறைந்து 2.7ஆக உள்ளது. அதிகபட்சமாகக் கோவையில் பாசிட்டிவ் விகிதம் 6.2%ஆகக் உள்ளது. செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் பாசிட்டிவ் விகிதம் 4க்கு மேல் உள்ளது. தலைநகர் சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 3.5ஆக குறைந்துள்ளது.
மாவட்ட ரீதியாகப் பாதிப்பு
அதேநேரம் மாவட்ட ரீதியிலான பாதிப்பில் இன்னும் சென்னை தான் மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் ஒரே நாளில் 461 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கோவையில் தினசரி பாதிப்பு 432 பேருக்கும் செங்கல்பட்டில் 208 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவை தவிரச் ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் மட்டுமே வைரஸ் பாதிப்பு 100க்கு மேல் உள்ளது.