கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா... சென்னையில் மீண்டும் 1000ஐ கடந்த வைரஸ் பாதிப்பு.. தப்புமா தலைநகர்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,817 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்துள்ளது.
Recommended Video

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல்வேறு பகுதிகளில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அதிலும் தேர்தல் காலம் நெருங்குவதால் கொரோனா கட்டுப்பாடுகளை எந்தக் கட்சியும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு
இன்று தமிழகம் 85,876 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய 4 பேர் உட்பட 2,817 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 8,89,490 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது வரை 1,96,81,244 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு
அதேபோல கொரோனா நோயாளிகளில் 19 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,738ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை நேற்று 15,879ஆக இருந்த நிலையில், இன்று அது 17,043ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா டிஸ்சார்ஜ்
இன்று மட்டும் மாநிலத்தில் 1,634 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,59,709ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 589 பேரும் செங்கல்பட்டில் 143 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகரில் உச்சம்
சென்னையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. பல வாரங்களுக்குப் பின் தலைநகரில் கொரோனா தாக்கம் 1000ஐ கடந்துள்ளது. நேற்று மட்டும் 1083 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனாவால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கோவையில் 280 பேருக்கும் செங்கல்பட்டில் 258 பேருக்கும் திருவள்ளூரில் 158 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 115 பேருக்கும் தஞ்சையில் 113 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications