குட் நியூஸ்.. 16 ஆயிரத்திற்குக் கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. இதே நிலை எத்தனை காலம் தொடரும்?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 1303 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவல் குறையக் குறைய ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 18ஆவது நாளாக மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது,

தினசரி கொரோனா பாதிப்பு
மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1.39 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 12 வயதுக்கு உட்பட்ட 83 சிறார்கள் உட்பட மொத்தம் 1,303 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் மொத்தம் 26,79,568 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் கடந்த சில நாட்களாகவே 1%க்கு கீழாகவே தொடர்கிறது. அதிகபட்சமாகத் திருப்பூரில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2%ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் மாநில சராசரியைவிடக் குறைவாக 0.8%ஆகவே கொரோனா பாசிட்டிவ் விகிதம் தொடர்கிறது.

கொரோனா உயிரிழப்புகள்
கொரோனா உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இன்று சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 13 உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 4 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதிகபட்சமாக்கக் கோவையில் 4 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 35,796 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. நேற்று மாநிலத்தில் 16,130 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 15992ஆகக் குறைந்துள்ளது. மேலும், மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,428 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், இதுவரை தமிழ்நாட்டில் 26,27,780 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான பாதிப்பில் இன்று சென்னையில் தான் அதிகமாக உள்ளது. தலைநகர் சென்னையில் இன்று மொத்தம் 168 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கோவையில் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டில் 98 பேருக்கும், ஈரோட்டில் 75 பேருக்கும் திருப்பூரில் 87 பேருக்கும் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications