நிம்மதி.. 25ஆவது நாளாக குறையும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் 100க்கு கீழ் சென்ற தினசரி பாதிப்பு
சென்னை: 25ஆவது நாளாக இன்றும் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது இன்று மாநிலத்தில் 11805 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மே மாதம் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. நிலைமை கையை மீறிச் செல்லாமல் இருக்க மாநிலத்தில் முதல் இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு
கொரோனா 2ஆம் அலை உச்சத்திலிருந்தபோது, 35 ஆயிரத்தைத் தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 12ஆயிரத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 25ஆவது நாளாக இன்றும் தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று மாநிலத்தில் 11,805 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மாநிலத்தில் 12,772 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 1,70,961 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவர்களில் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய இருவர் உட்பட 11,805 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்புகள்
இன்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் 267 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 148 பேர் அரசு மருத்துவமனைகளிலும் 119 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆகும். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 30,068 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது 1.25 லட்சம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர ஒரே நாளில் மட்டும் 23,207 பேர் டிஸ்சார்ஜ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 22,23,015 பேர் கொரோனாவில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர்.
மாவட்ட ரீதியாக வைரஸ் பாதிப்பு
மாவட்ட ரீதியாக எடுத்துக் கொண்டால் இன்னும் கோவையே கொரோனா பாதிப்பு முதலில் உள்ளது. கோவையில் ஒரே நாளில் 1563 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஈரோட்டில் 1270 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கே (793) கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் கீழாகச் சென்றுள்ளது