லாக் அப் மரணங்கள் எதிரொலி.. இரவு நேரத்தில் ஸ்டேஷனில் வைத்து விசாரணை கூடாது.. தமிழக டிஜிபி உத்தரவு
சென்னை: வழக்கு விசாரணைக்காக கைதாகும் நபர்களிடம் இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவில் கூறியதாவது: தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.
குறிப்பாக காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை, திருவண்ணாமலையில் லாக் அப்பில் வைத்து விசாரணை நடத்தப்பட்ட இருவர் மரணமடைந்த நிலையில் டிஜிபி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

மெரினாவில் குதிரை சவாரி
சென்னை மெரினாவில் குதிரை சவாரி தொழில் செய்து வந்தவர் விக்னேஷ். அவரது நண்பர் சுரேஷ். இருவரும் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி இரவு கெல்லீஸ் சந்திப்பில் தலைமைச் செயலக காலனி ஜி5 போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

விக்னேஷ்
இந் நிலையில் அங்கு விக்னேஷிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்து சென்றனர். அங்கு விக்னேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நாடித் துடிப்பு குறைவாக இருப்பதாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். அப்போது அங்கு செல்லும் வழியில் விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

புகார்
இந்த சம்பவத்தில் விக்னேஷின் தாய் பரபரப்பு புகாரை அளித்திருந்தார். இதனால் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அது போல் திருவண்ணாமலையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஒருவர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த இளையான்குன்னியை அடுத்த தட்டரணை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி (48). இவரை கடந்த 26ஆம் தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீஸார் சாராயம் விற்பனை தொடர்பாக கைது செய்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த தங்கமணி திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை மதுவிலக்கு டிஎஸ்பி உள்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications