பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோக தேதி மாற்றம்- அமைச்சர்கள் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோக தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர்கள் பெரியகருப்பனும் சக்கரபாணியும் அறிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஏழை எளிய மக்களும் பொங்கல் செய்து பண்டிகையை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1000 ரூபாயாக இருந்த பொங்கல் பரிசு தொகுப்பை ரூ 2500 ஆக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர்த்தி வழங்கினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகைக்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

14 பொருட்கள்
இதில் 14 க்கும் மேற்பட்ட மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இவை தரமற்றதாக இருந்ததாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்காமல் பரிசு தொகையாக வழங்கலாமா என்ற யோசனையில் தமிழக அரசு இருந்தது.

ரூ 1000 பரிசு தொகை
அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 1000 பரிசு தொகையாக வழங்க தமிழக அரசு முடிவு செய்வதாக அறிவித்தது. அதனுடன் தலா 1 கிலோ பச்சரிசியும் சர்க்கரையும் வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

33 ஆயிரம் ரேஷன் கடைகள்
தமிவகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலமாக இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் பயன்பெறுவர். இதற்காக ரூ 2,357 கோடி செலவிடப்படுகிறது. இந்த திட்டத்தை வரும் ஜனவரி 2 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.

இன்று முதல் டோக்கன்
இந்த நிலையில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி ஆகியோர் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ஜனவரி 1 அன்று டோக்கன் விநியோகம் இல்லை
அப்போது கூறுகையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோக தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டிசம்பர் 30 முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் நடைபெறும். ஜனவரி 1 புத்தாண்டு அன்று டோக்கன் விநியோகிக்கப்படாது.

பொங்கல் தொகுப்பு
ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ 1000 ரொக்கம் ஆகியவை பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஊரக பகுதிகளில் 200 அட்டைதாரர்களுக்கும் நகர பகுதியில் 300 டோக்கன்களும் கொடுக்கப்படும். பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். என தெரிவித்தனர். வரும் 13 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு வழங்கி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கனை ரேஷன் கடை ஊழியர்களே வீடு தேடி போய் வழங்குவர். பொங்கல் பரிசுத் தொகையை பெற கைரேகை பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications