நானும் டெல்டாகாரன்.. நிலக்கரி எடுக்கும் திட்டத்துக்கு அரசு அனுமதிக்காது! சட்டசபையில் ஸ்டாலின் உறுதி
சென்னை: தானும் டெல்டாகாரன் என்பதால் இந்த நிலக்கரி திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றும், தமிழ்நாடு அரசு எக்காரணத்தை கொண்டும் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்காது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் உறுதியளித்து உள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை எதிர்த்து இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இங்கு கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தொழிற்துறை அமைச்சர் விளக்கமாக பதிலளித்து இருக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
நான் நீண்ட நேரம் அதுகுறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த செய்தி வந்தபோது நீங்கள் எல்லாம் எப்படி அதிர்ச்சிக்கு ஆளானீர்களோ, அதேபோல் நானும் அதிர்ச்சிக்கு ஆளானேன். செய்தியை பார்த்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி, அதற்கு பிறகு உடனே பிரதமருக்கு கடிதம் எழுதினேன்.

பிரதமருக்கு கடிதம்
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடந்துகொண்டு இருப்பதால் அந்த கடிதத்தின் நகலை திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு அவர்களுக்கு அனுப்பி உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து நமது எதிர்ப்பையும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டேன். அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

மத்திய அமைச்சர் உத்தரவாதம்
தொழிற்துறை அமைச்சர் சொல்வதைபோல் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் அவர்கள், வெளியூரில் இருக்கும் காரணத்தால் அவரை நேரடியாக சந்திக்க முடியவில்லை. எனவே டிஆர் பாலு அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு நாங்கள் மதிப்பளிப்போம். கவலைப்பட வேண்டாம் என்ற ஒரு உத்தரவாதத்தை மத்திய அமைச்சர் அளித்ததாக டிஆர் பாலு அவர்களிடம் செய்தியை சொல்லி இருக்கிறார்கள்.

நானும் டெல்டாகாரன்
ஆகவே, நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல.. நானும் டெல்டாகாரன். எனவே இதில் உறுதியாக நான் இருப்பேன். நீங்கள் எல்லாம் எப்படி இதில் உறுதியாக இருக்கிறீர்களோ அதைவிட நான் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் நிச்சயமாக நமது தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்காது." என்றார்.

நிலக்கரி சுரங்க திட்டம்
நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கான ஏழாம் சுற்று ஏலத்தில் இடம்பெறும் பகுதிகளை மத்திய அரசின் நிலக்கரித் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் இடம்பெற்று உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

3 பகுதிகள் எவை?
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி. கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய பகுதிகளில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

இணைய வழி ஏலம்
இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முடிந்து வரும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை இணைய வழியில் ஏலம் நடைபெற உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் இந்த மூன்று பகுதிகளிலும் நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியாது என கடிதத்தில் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்து தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும்." என வலியுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications