கொள்ளிடம் தடுப்பணை.. ஜெ. அறிவிப்பை காற்றில் பறக்கவிடும் தமிழக அரசு.. ராமதாஸ் புகார்
சென்னை : கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணையுடன் கூடிய தடுப்பணைக் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதற்கான அடிப்படைப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந் நிலையில், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் விவகாரத்தில் ஜெயலலிதா அறிவிப்பை காற்றில் பறக்க விடுவதா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் காவிரி உபரி நீர் பெரும்பாலும் வீணாக கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆற்று நீரைக் கொண்டு தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும்.
அதற்காகத் தான் 110 கிலோ மீட்டர் பாயும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 5 கிலோ மீட்டர் இடை வெளியில் ஒரு தடுப்பணை வீதம் 20 தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம், குமாரமங்கலத்திற்கும், கடலூர் மாவட்டம் ஆதனூருக்கும் இடையில், கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கும் வகையில், 400 கோடி ரூபாயில் கதவணையுடன்கூடிய தடுப்பணை கட்டப்படும் என்று 04.07.2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆனால், 4 ஆண்டுகளாகியும் இதுவரை அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் எஎந்த அடிப்படைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தடுப்பணைத் திட்டத்தை அறிவித்த ஜெயலலிதா அதன் பின் இரு ஆண்டுகள் பதவியில் நீடித்தாலும், தமது அறிவிப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை.
அவருக்குப் பிறகு பதவிக்கு வந்தவர்கள் தடுப்பணை கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டார்களே தவிர, இதுவரை தடுப்பணைக் கட்டுவதற்கான நிலங்களைக் கூட கையகப்படுத்தவில்லை. அதனால் தடுப்பணைக்கான திட்ட மதிப்பு 600 கோடியாக அதிகரித்து விட்டது.
தமிழக அரசின் இந்த அலட்சியம் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, விவசாயிகளின் இந்தக் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அவற்றில் பெரும்பாலான கோரிக்கைகள் அப்பகுதி விவசாயிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளுக்கும் பொருந்தக் கூடியவை.
ஆகையால், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் வரும் 20ம் தேதி நடத்தும் சாலை மறியல் போராட்டத்திற்கு பாமக முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications