முதல்முறையாக கொடைக்கானல் செல்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி! 3 நாட்கள் பயணம்.. போக்குவரத்து மாற்றம்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கொடைக்கானலுக்கு 3 நாட்கள் பயணமாக செல்கிறார். இதனால் கொடைக்கானலில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று கொடைக்கானலுக்கு செல்கிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் அவர் மதுரைக்கு மதியம் 1மணிக்கு செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வருகிறார். கொடைக்கானலில் அரசுக்கு சொந்தமான கோகினூர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தங்குவார்.

இதைத் தொடர்ந்து நாளை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் இருக்கும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநர் செல்கிறார். அங்கு மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு கொடைக்கானலில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை அவர் பார்வையிடுகிறார். மாலை மீண்டும் அரசு பங்களாவுக்கே செல்கிறார்.
இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் காலை 10 மணிக்கு கொடைக்கானலில் இருந்து காரில் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார். பின்னர் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஆளுநர் செல்ல இருக்கிறார். அவர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக கொடைக்கானல் வருகிறார். இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதற்கிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கொடைக்கானலுக்கு வருவதையொட்டி திண்டுக்கல் போலீஸ் டி.ஐ.ஜி. அபினவ்குமார் மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் எஸ்பிக்கள், 13 துணை எஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என மொத்தம் 1,100 போலீஸார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். கொடைக்கானல் முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
ஆளுநர் தங்கும் கோகினூர் மாளிகை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அவர் பார்வையிட இருக்கும் சுற்றுலா இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டுகள் கண்டறியும் 5 போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது போல் கொடைக்காநலில் போக்குவரத்தும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. எனவே அந்த நேரத்தில் கொடைக்கானலுக்கு செல்லவும், கொடைக்கானலில் இருந்து வருவதற்கும் அந்த சாலையில் அனுமதி இல்லை. அதேநேரம் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன.












Click it and Unblock the Notifications