தமிழக எல்லையில் கேரளா டிஜிட்டல் நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை- தமிழக அரசு திட்டவட்டம்
சென்னை: தமிழக- கேரளா பொது எல்லையில் கேரள மாநில அரசானது டிஜிட்டல் நில அளவை பணிகளை மேற்கொள்ளவே இல்லை என தமிழக அரசு திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை: தமிழ்நாடு- கேரள மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநில அளவை பணியினை நவம்பர் 1-ந் தேதி முதல் துவங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்பொருள் குறித்து ஏற்கனவே கடந்த 09-11-2022 அன்று வருவாய்த்துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் மீண்டும் இது குறித்து இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது.

கேரளாவின் திட்டம் இதுதான்..
கேரளா மாநிலம் தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன் சோலை வட்டத்தைச் சேர்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதல் கட்டமாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது; அந்த கிராமங்களின் இரு மாநில பொது எல்லைகள் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கூட்டு ஆலோசனை
ஆகையால் அது தொடர்பான பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு தேனி மாவட்டம் நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் மாநில எல்லைகள் தொடர்புடைய பதிவேடுகளை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்த உரிய தேதி குறிப்பிட்டு தகவல் தெரிவிக்க கோரப்பட்டிருந்தது.

முடிவு செய்யும் மாவட்ட நிர்வாகம்
இந்த விவரப்படி தொடர்புடைய ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்த தேதியை முடிவு செய்து தகவலை கேரளா மாநில தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநருக்கு கடித வரைவு மூலம் தெரிவிக்கவும், அந்த கூட்டு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.

பொது எல்லையில் சர்வே இல்லை
மேலும் இது தொடர்பாக தமிழக கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நில அளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனாலும் தமிழக வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசால் டிஜிட்டல் நில அளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க தேனி மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications