தீபாவளி அன்று இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதி.. தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை: இந்த ஆண்டு வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகையும் மகாவீரர் ஜெயந்தி நாளும் ஒரே நாளில் வரும் நிலையில், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தளவில் கணிசமானோர் தீபாவளி தினத்தன்று இறைச்சி சமைத்துச் சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள்.
ஆனால் அதே நாளில் மகாவீரர் ஜெயந்தியும் வருகிறது. பொதுவாகத் தமிழ்நாட்டில் மகாவீரர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்படும்.

இறைச்சிக் கடைகளுக்குத் தடை
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி முன்பு வெளியிட்டிருந்த அறிக்கையில், "எதிர்வரும் மகாவீர் நிர்வான் நாள் 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட அனைத்து இறைச்சிக் கடைகளையும் மூடிவைத்திருக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மண்டலம் கைக்குட்பட்ட கோட்டங்கள் 49 முல் 63 முடிய உள்ள அனைத்து கோட்டங்களிலும் அமைந்துள்ள ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, கோழி இறைச்சிக் கடைகளை 04.11.2021 (வியாழக்கிழை) அன்று மூடி வைத்திருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பல்பொருள் அங்காடிகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்பனை செய்வது தடை செய்யப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆனால், இந்த உத்தரவுக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாகப் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை இணையத்தில் வெளிப்படுத்தினர். அதேபோல தீபாவளி நாளில், இறைச்சி வியாபாரம் அதிக அளவில் நடைபெறும் என்றும் அன்றைய தினம் இறைச்சி கடைகளுக்குத் தடை விதித்தால் தங்கள் வியாபாரம் பெரியளவில் பாதிக்கப்படும் என வியாபாரிகளும் வலியுறுத்தினர்.

தமிழக அரசு
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்த ஆண்டு வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது.

இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி
ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில் பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள உள்ள இறைச்சிக் கடைகளை மூடப்படும்" என்று தமிழ்நாடு அரசு தனது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications