வெறும் 3 மணி நேரம்.. ஓமிக்ரான் கொரோனாவை துல்லியமாகக் கண்டறியலாம்.. தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை: உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரசை எளிதாக வெறும் 3 மணி நேரத்தில் கண்டறியும் வகையில் தமிழகத்தில் உள்ள 12 ஆய்வகங்களுக்கு டேக்பாத் கிட் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே உலக நாடுகளின் முக்கிய பேசுபொருளாக மாறிவிட்டது. ஒமிக்ரான் உருமாறிய கொரோனா. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.
கடந்த காலங்களில் உருமாறிய கொரோனா வகைகளே அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தியதால், இம்முறை உலக நாடுகள் எச்சரிகையுடன் உள்ளன.

ஓமிக்ரான் கொரோனா
தென் ஆப்பிரிக்காவில் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டிருந்தாலும் கூட, வெறும் சில நாட்களில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் பரவிவிட்டது. உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் கொரோனாவை கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியிடப்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உடனான விமான போக்குவரத்துக்கு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகள் முழுமையாகவே வெளிநாட்டினருக்குத் தடை விதித்து விட்டன.

புதிய கட்டுப்பாடுகள்
இந்தியாவில் தற்போது வரை ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், என்ன வகையான வைரஸ் பாதிப்பு என்பதைக் கண்டறிய மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதனிடையே ஓமிக்ரான் கொரோனா வைரசை கண்டறிந்து, தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

12 நகரங்கள்
பொதுவாக மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை மூலம் ஒருவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய ஒரு வாரம் வரை கூட ஆகும். ஆனால், வெறும் 3 மணி நேரத்தில் ஒமிக்ரான் உருமாறிய வைரஸை கண்டறியும் வசதி தமிழ்நாட்டில் உள்ள 12 ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட12 அரசு ஆய்வகங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் 3 மணி நேரத்தில்
இதற்காக டேக்பாத் கிட் சம்பந்தப்பட்ட ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் அவர்களுக்கு இந்த டேக்பாத் கிட் மூலம் எந்த வகையான உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை வெறும் 3 மணி நேரத்தில் கண்டறியலாம். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் இந்த கிட்கள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

உருமாறிய கொரோனா
இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் கொரோனா வித்தியாசமானது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனாவின் புரோத ஸ்பைக்கில் 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் உள்ளதாகவும் இதுவரை எந்த உருமாறிய கொரோனா வைரசிலும் இந்தளவுக்கு மாற்றங்களைக் கண்டறியவில்லை என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். உலக சுகாதார அமைப்பும் இந்த ஓமிக்ரான் கொரோனா வகையைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications