தமிழகத்தில் காலியான ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல்.. வாக்குப் பதிவு தொடங்கியது
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற இருந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், வாக்காளர் பட்டியல், வார்டு குளறுபடி காரணமாக தொடரப்பட்ட வழக்கால் நிறுத்தப்பட்டது. இதனால் 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறவில்லை. இதனிடையே புதிதாக 9 மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவித்தது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு மறு சீரமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.
அதன் பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதற்கிடையே ஊரக, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர்களில் சிலர் உயிரிழந்ததாலும், பதவி விலகியதாலும் அந்த இடங்கள் காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டன.
இவ்வாறு கிராம புறங்களில் ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர்கள் என 498 இடங்கள் காலியாக உள்ளன. நகர்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 12 பதவிகள் காலியாக உள்ளன. எனவே மொத்தம் 510 இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த காலியிடங்களுக்கான தேர்தல் இன்று அதாவது ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 வரை நடைபெறும். 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அனைத்துமே ஜூலை 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
அன்று 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். அதிமுகவில் உள்கட்சி பூசல் நடைபெறுவதால் படிவம் ஏ மற்றும் பி-யில் அதிமுக தலைமை கையெழுத்திடாததால் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து சுயேச்சை சின்னங்களில் போட்டியிடுகிறார்கள். மேலும் மாநகராட்சி, மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடவில்லை.












Click it and Unblock the Notifications