சிறை தண்டனை எதிரொலி.. அமைச்சராக மட்டுமல்ல, எம்எல்ஏ பதவியையும் பறி கொடுத்தார் பாலகிருஷ்ண ரெட்டி
Recommended Video
சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவரது எம்எல்ஏ பதவியும் உடனடியாக பறிபோனது.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற கலவர வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று, எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை, சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10500 அபராதம் விதிக்கப்பட்டது.
எல்லாம் ஓவர்.. நீதிமன்றத்திலிருந்து சொந்த காரில் வீடு திரும்பிய பாலகிருஷ்ண ரெட்டி
இதனிடையே, நீதிபதி சாந்தி முன்னிலையில், உடனடியாக, பாலகிருஷ்ண ரெட்டி வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும், எனவே தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதி அனுமதியளித்து, தண்டனையை நிறுத்தி வைத்தார்.
எம்எல்ஏ பதவி
தண்டனைதான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்த கோர்ட் உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், அந்த மக்கள் பிரதிநிதியின் பதவி உடனே, பறிபோய்விடும். அதன்படி உடனடியாக பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறி போகிறது. எனவே இயல்பாக அவர் அமைச்சராகவும் தொடர முடியாது. இதை மூத்த வழக்கறிஞர் வில்சனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
6 வருடங்கள்
பாலகிருஷ்ண ரெட்டி, மேல்முறையீடு செய்து அதில் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படாவிட்டாலே தவிர, பாலகிருஷ்ண ரெட்டியால் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும்.
மேல்முறையீடு
மேல்முறையீட்டின்போது, கீழ்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக ரத்து செய்துவிட்டு விசாரணை நடத்தினால் மட்டுமே அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும். அப்படி இல்லாவிட்டால் 6 வருடங்கள் போட்டியிட முடியாது.
21 தொகுதிகள்
பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறிபோயுள்ளதால், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள எம்எல்ஏக்கள் இடம் 21 ஆக உயர்ந்துவிட்டது. எனவே ஏப்ரல் மாதத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது தமிழகம். பாலகிருஷ்ண ரெட்டி, ஒசூர் தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் என்பது நினைவிருக்கலாம்.