"பிரதமரை ஒரு விஷயத்தில் நாம் பாராட்ட வேண்டும்.." உற்று கவனித்த கூட்டம்! அடுத்து உதயநிதி என்ன சொன்னார்
சென்னை: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, மத்திய பாஜக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.
சென்னை பல்லாவரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்தி பேசும் மாநிலங்களுக்குக் கூட பாஜக எதையும் செய்யவில்லை என்றும் இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற முடியாது என்றும் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின்: முன்னதாக இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பட்ஜெட்டிற்கு முன்பாக நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டியுள்ளார். கண்டிப்பாக இந்தாண்டும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு அல்வா தான் கொடுக்கப் போகிறார்கள். அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அல்வா கொடுக்க நாம் தயாராக வேண்டும்.
பாராட்டலாம்: மோடி முன்பு ஒரு வாக்குறுதி கொடுத்தார். அதாவது 2020இல் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவேன் என்று அவர் வாக்குறுதி கொடுத்தார். இப்போது திரும்ப அதையே சொல்கிறார். 2047இல் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் காட்டுவேன் என்கிறார். ஆனால், ஒரு விஷயத்திற்காக நாம் பிரதமரைப் பாராட்டலாம்,
அதாவது இந்தியாவையே நான் மாற்றிக்காட்டுவேன் என்றார். இப்போது நாட்டின் பெயரை மாற்றுகிறார். இனிமேல் யாரும் இந்தியா எனச் சொல்லக் கூடாது.. பாரத் எனச் சொல்லுங்கள் என்கிறார். அது மட்டுமின்றி கடந்த 9 ஆண்டுக்கால பாஜக அரசின் ஊழல்கள் அனைத்தும் சிஏஜி தணிக்கை குழுவில் வெளியே வந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார். அவரது பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
பாராட்டு விழா: முன்னதாக அமைச்சர் உதயநிதி சென்னையில் மீனவர்களுக்குச் சான்றிதழ் அளித்து நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் உதயநிதி, "சென்னை மட்டுமின்றி நெல்லையிலும் கனமழை ஏற்பட்ட போது, மீட்புப் பணிகளில் இறங்கியவர்கள் நீங்கள்.. உங்களுக்கு பணிகளைப் பாராட்டவே ஒட்டுமொத்த சென்னையும் இப்போது இங்கே வந்துள்ளது.
வெள்ளம் வந்த போது முதல்வர் தொடங்கி அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். யாரும் வீடுகளில் சென்று ஒளிந்து கொள்ளவில்லை. மக்களோடு மக்களாக நின்றோம். மீனவர்களாகிய நீங்கள் மீட்புப் பணிகளில் எங்களுடன் துணை நிற்பீர்கள் என்ற தைரியத்திலேயே நாங்கள் அங்கே நின்றோம்.
பாராட்டு: யாராக இருந்தாலும் உதவி கேட்டால் தான் உதவி செய்ய வருவார்கள். ஆனால், மீனவ நண்பர்களான நீங்கள் தான் உதவி கேட்கும் முன்னரே, நிலைமையைப் புரிந்து உதவிக்கு வந்தீர்கள். முதலில் வந்து களத்தில் நின்றீர்கள். மீனவர் நலனில் எங்களுக்கு மிகப் பெரிய அக்கறை இருக்கிறது.
இந்தாண்டு மட்டுமில்லை. 2015 தொடங்கிப் பல சமயங்களில் ஒவ்வொரு மழை வெள்ளம் ஏற்படும் போது மக்களை மீட்டு வர நீங்கள் தான் உதவி உள்ளீர்கள். ஒரு விஷயம் தவறு என்று பட்டால் துணிச்சலாக அதைச் சொல்பவர்கள் மீனவ நண்பர்கள். அதேபோல கடைசி வரை தோளோடு தோள் நின்று உதவுபவர்கள் மீனவ நண்பர்கள். ஜல்லிக்கட்டு சமயத்தில் இந்தியாவிலேயே மிகப் பெரியளவில் போராட்டத்தை நமது மாணவர்கள் போராடினார்.
அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை அப்போது இருந்த அரசு ஒடுக்க நினைத்த போது அங்கே வந்து நின்றவர்கள் நீங்கள், ஜல்லிக்கட்டிற்காக மாணவர்கள் போராடினாலும் கூட அந்த மாணவர்களுக்காகப் போராடியவர்கள் நீங்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் முதலில் கேட்பது எப்படியாவது எங்களை மீட்டு வெளியே விட்டுவிடுங்கள் என்பதுதான். அந்த நேரத்தில் மீனவர்களாகிய நீங்கள் தான் தமிழக மக்களைக் காப்பாற்றி உள்ளீர்கள்.. உங்கள் வாழ்வாதாரமான படகு உடைந்தாலும் பரவாயில்லை என்று மக்களைக் காப்பாற்றியவர்கள் நீங்கள்.
மீனவர்கள் பங்கு: நாங்கள் நிவாரண பொருட்களை ஏற்படு செய்துவிடுவோம். ஆனால், அது மக்களுக்குச் சென்று சேர மீனவர்களான நீங்கள் தேவை. மீனவர்கள் அனைவரும் மீட்புப் பணிகளில் அரசுக்குத் துணை நின்றீர்கள். வெள்ளம் வந்த காலத்தில் வீட்டிற்கே செல்லாமல் பணியாற்றி உள்ளீர்கள். கடந்த 2.5 ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களைத் தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது.
மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல நாட்டுப் படகுகளுக்கு வழங்கப்படும் மானிய விலை மண்ணெண்ணெய், டீசல் அளவை உயர்த்தி உள்ளோம். இப்படிப் பல நலத்திட்டங்களை நாம் சொல்லலாம்.
நான் இன்னொரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், யார் உண்மையான கடவுள் என்றால்.. மற்றவர்கள் உயிரை யார் காப்பாற்றுகிறார்களோ அவர்கள் தான் உண்மையான கடவுள். அப்படிப் பார்த்தால் நீங்கள் அனைவரும் இறைவனுக்குச் சமம்" என்றார்.












Click it and Unblock the Notifications