தமிழ்நாடு பெயரை அழிக்க நினைக்கும் பாஜக அழியும்-ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அமைச்சர்கள் ஆவேசம்!
சென்னை: தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக பதிலளித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.

தமிழ்நாடு என்ற பெயருக்கு பதிலாக தமிழகம் என்று இருக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் ஆளுநர் ஆர்.என்.ரவியை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்துக்கு திடீரென ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்து பேசி இருப்பதற்கு தமிழ்நாட்டின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலரும் அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ்: பிள்ளைக்கு பெயர் சூட்ட பெற்றவர்களுக்கு தெரியாதா ? தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பிகள் அண்ணாவின் தலைமையில் 1968 ஜூலை 18 ல் தமிழ்நாடு என பெயர் சூட்டும் சட்டத்தை சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றினார் தமிழ்நாடு என்ற பெயரை அழிக்க நினைக்கும் பாஜக தமிழ்நாட்டில் வேரோடு அழிந்தே தீரும்

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:#தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் @mkstalin தலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்!

தமிழ்நாடு அமைச்சர் பெரியகருப்பன்: வாழ்க தமிழ்!வளர்க தமிழ்!#தமிழ்நாடு

திமுக லோக்சபா எம்.பி. கனிமொழி (தூத்துக்குடி, தமிழ்நாடு): நம் மொழி - பண்பாடு - அரசியல்-வாழ்வியலின் அடையாளம் "தமிழ்நாடு". அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!
திமுக லோக்சபா எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை, தமிழ்நாடு): #தமிழ்நாடு என்பது இங்கே கல்லில் பொறிக்கப்பட்ட சொல் அல்ல. தமிழ் மக்கள் இதயத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது. - பேரறிஞர் அண்ணா
தமிழ்நாடு சட்டசபை எம்.எல்.ஏ. திருப்பூர் செல்வராஜ்: ஆளுநரின் கவனத்துக்கு...👇தமிழ்நாடு வாழ்க!தமிழ்நாடு வாழ்க!தமிழ்நாடு வாழ்க!
#தமிழ்நாடு 💪

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி: உங்கள் வாழ்நாளில் எப்பொழுதுமே நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் ஆளவே முடியாது. உங்களால் அது ஒருபோதும் முடியாது. - திரு @RahulGandhi என பதிவிட்டு நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையை பகிர்ந்துள்ளனர். மேலும் #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக்கில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்டோரின் கருத்துகள் பகிரப்பட்டும் வருகின்றன.
முன்னதாக நேற்று திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு, ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு - தமிழன் - தமிழ் என்பவை ஆளுநர் இரவிக்கு கசப்பானவையாக இருக்கின்றன. எனவே இவற்றை விட்டு விலகிச் செல்லும் முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு ஒரு மாநில தலைவர் இருப்பதால், தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்துகொண்டு இன்னொரு மாநில பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு தமிழர்களுக்கே எதிராக திரு. இரவி அவர்கள் பேசிக் கொண்டிருக்காமல் அரசியல் சட்டப்படி பணியாற்றுவதே அவருக்கு சிறந்தது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications