'நாடோடிகளை மன்னராக்குகிறார்'.. கலைஞர் இருந்தால் ஸ்டாலினை கட்டியணைத்திருப்பார்.. வைரமுத்து புகழாரம்!
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் அருகே பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.
கலைஞர் நகர மேம்பாட்டுத் திட்ட முன்மொழிவு ஒப்புதல், அங்கன்வாடி மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணைகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கான ஆணை ஆகியவற்றையும் முதலவர் வழங்கினார்.

இதனால் பயன் பெற்ற நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பவானி மற்றும் அஸ்வினி ஆகிய பெண்கள் முதல்வர் ஸ்டாலின் தங்கள் இல்லங்களுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது இல்லங்களுக்கு நேரில் சென்று, குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.
மேலும், நரிக்குறவர் மற்றும் இருளர் குடியிருப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, அவர்களிடம் வசதிகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இந்த நிலையில் நரிக்குறவர், இருளர் இனத்தைச் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கவிதை வடிவில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

நரிக்குறவர் இனத்தின்
நலிவுநீங்க
முற்போக்கு எட்டு வைத்திருக்கிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மனைப்பட்டா மூலம்
நாடோடிகளை
மன்னர்களாக்குகிறார்
சிங்கத்தின் இதயத்தோடும்
சிறுத்தையின் பாய்ச்சலோடும்
செயல்படும் முதலமைச்சரைக்
கலைஞர் இருந்தால்
கட்டியணைத்திருப்பார்;
நாங்கள் கைகுலுக்குகிறோம்












Click it and Unblock the Notifications